மிசா கைது.. விஜய் செய்த செயல்.. நடுவில் புகுந்த அமைச்சர் ஸ்ரீநாத்! கடைசியாக செங்கோட்டையன் தந்த பதில் | Minister Sreenath Interrupts Question on CM Vijay Controversial Body Language in TN Assembly

Spread the love

Tamilnadu

oi-Vigneshkumar

சென்னை: சட்டசபையில் முதல்வர் விஜய் பேசும்போது தாடையின் மீது கை வைத்து பேசியிருந்தார். இது பெரியளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் முதல்வர் விஜய்யை விமர்சித்திருந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவரை முந்திக்கொண்டு அமைச்சரும் முதல்வரின் நண்பருமான ஸ்ரீநாத் பதிலளித்தார்.

இன்றைய தினம் நாகப்பட்டினத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அமைச்சர்கள் விரிவான ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

Minister Sreenath Misa Vijay Controversial Body Language

அமைச்சர் செங்கோட்டையன்

தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருந்த நிலையில், அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், “தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வாக்குகளை பெறும் கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் சின்னத்தை வழங்குவார்கள். இனி வரும் தேர்தல்களிலும் அதே சின்னம் வழங்கப்படும். இதுதான் நடைமுறை. சிறிய கட்சிகளுக்கு கூட இதுபோல அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வாக்குகளை பெற்றால் போதும் தொடர்ந்து அந்த சின்னங்கள் அந்த கட்சிக்கு வழங்கவே இதுபோன்ற நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்றும். இப்போது நாங்கள் ஆட்சிக்கே வந்துவிட்டோம். இதன் காரணமாகவே தேர்தல் ஆணையம் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

புதிய தலைமை செயலகம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமையும் என முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவித்திருந்தார். இருப்பினும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் என்ற அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, அந்த திட்டம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என மட்டும் செங்கோட்டையன் பதிலளித்தார்.

மிசா

மிசா குறித்து பேசும் போது தாடையின் மீது முதல்வர் விஜய் கை வைத்து பேசியது சர்ச்சையாக வெடித்திருந்தது. அது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் பேசியிருந்தார். இது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கும் முன்பே அவரை முந்திக்கொண்டு அமைச்சர் ஸ்ரீநாத் ஏதோ சொல்ல வந்தார். இருப்பினும், அதற்குள் செங்கோட்டையனே இதற்கும் பதிலளித்தார்.

இந்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன், “இது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்தே விரிவான தெளிவான விளக்கம் வந்துள்ளது. அதுவே போதுமானது என கருதுகிறேன்” என மட்டும் பதிலளித்துவிட்டு சென்றார்.

விஜய் தரப்பு விளக்கம்

முதல்வர் விஜய்யின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் விஜய் தரப்பில் இருந்து நேற்றைய தினம் விளக்கம் ஒன்று தரப்பட்டு இருந்தது. முதல்வர் விஜய்யின் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *