மாடலிங் உலகின் ஜொலிக்கும் மேடைகளில் தனது பயணத்தை ஆரம்பித்த காஷிஷ் மெத்வானி இன்று நம் தேசம் காக்கும் இந்திய ராணுவத்தின் “ஏர் டிபென்ஸ்’ பிரிவில் லெப்டினன்ட்டாக சேவை புரிந்து வருகிறார். 2023-ஆம் ஆண்டு ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா’ பட்டத்தை வென்று புகழின் உச்சத்தைத் தொட்டவர் விளம்பரத் துறை, கலைத்துறை மட்டுமல்லாது, கல்வியிலும் சிறந்து விளங்கியவருக்கு, உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் அரிய வாய்ப்பும் தேடி வந்தது.

காஷிஷ் மெத்வானி ஜனவரி 9, 2001 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகிலுள்ள உல்ஹாஸ்நகரில் பிறந்தார். ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக வளர்ந்த காஷிஷிற்குள், தனது தந்தையைப் போலவே நாட்டுக்காகச் சீருடை அணிய வேண்டும் என்ற ஆர்வம் ஆழமாக இருந்தது. குறிப்பாக, தேசிய மாணவர் படையில் (NCC) இருந்தபோது அவர் பெற்ற அனுபவங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று, நாட்டின் மிக உயரிய கேடட் விருதைப் பெற்ற அந்தத் தருணம், ராணுவச் சீருடையே தனக்கு ஒரு முழுமையான அடையாளத்தையும் மனநிறைவையும் தருவதாக உணர்ந்திருக்கிறார்.
“மாடலிங் என்பது எனது ஆர்வமாக இருந்தது, ஆனால் ராணுவமே நான் இருக்க வேண்டிய சரியான இடம் என்பதை என்சிசி அனுபவம் எனக்கு உணர்த்தியது,” என்று காஷிஷ் மெத்வானி குறிப்பிடுகிறார்.

ராணுவத் தேர்வான சி.டி.எஸ் (CDS) தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியவர் அதன்பின்னர் சென்னை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (OTA) சுமார் 11 மாதங்கள் அவர் மேற்கொண்ட பயிற்சி சவாலானது. அங்கு தனது திறமையால் ‘அகாடமி அண்டர் ஆபீசர்’ (Academy Under Officer) என்ற உயரிய பதவியை எட்டியதுடன், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பிற பயிற்சிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். செப்டம்பர் 2025-ல் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, இந்திய ராணுவத்தின் ‘ஏர் டிபென்ஸ்’ பிரிவில் லெப்டினன்ட்டாகப் பொறுப்பேற்றார். ஒரு வெற்றிகரமான மாடலாகத் தொடங்கி இன்று தேசம் காக்கும் அதிகாரியாக உயர்ந்துள்ள இவரது வாழ்வு, லட்சியத்தை நோக்கி ஓடும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த உத்வேகத்தை நிச்சயம் கொடுக்கும்!