மீண்டும் அணை உடைந்தது! திபெத் சம்பவத்தால் நேபாளத்தை மீண்டும் தாக்க போகும் பேரழிவு! திடீர் எச்சரிக்கை | Nepal Flood Alert: Fresh Dam Breach in Tibet Raises Fears of Another Flash Flood, People in fear

Spread the love

International

oi-Vigneshkumar

காத்மாண்டு: கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதற்கிடையே திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர்த்தடுப்பு உடைந்ததாக தகவல் கிடைத்துள்ள நிலையில், நேபாள அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை திடீரென பேரழிவுகரமான வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடுப்புகளில் தேங்கி இருந்த நீர் திடீரென ரிலீஸ் ஆன போதே இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nepal nepal flood Nepal flood reason

நேபாளம்

நேபாளம் சீனா எல்லை பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் ராசுவா மாவட்டத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாறைகள், மண், தண்ணீர் மற்றும் குப்பைகள் கலந்த வெள்ளம் பாட்டேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் வழியாக கீழ்நோக்கி பாய்ந்து பல குடியிருப்புகளை அழித்தது. கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல பகுதிகள் பல அடி உயரத்திற்கு சேறு மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உடைந்த நீர் தேக்கம்

இந்த நிலையில், திபெத் பகுதியில் மீண்டும் நீர்த்தடுப்பு உடைந்ததாக கிடைத்த தகவல், ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆற்றங்கரைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே பணியில் இருக்கும் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாட்டேகோஷி ஆற்றின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக நேபாள குழுவும் எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சீனாவின் எச்சரிக்கை

இதற்கு முன்பே திபெத் பகுதியில் நிலச்சரிவால் உருவான புதிய ஏரி காரணமாக வெள்ள அபாயம் இருப்பதாக சீனாவும் நேபாளமும் எச்சரித்திருந்தன. அந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கனமீட்டர் தண்ணீர் தேங்கியிருந்ததாக சீன நீர்வள அமைச்சகம் கூறியுள்ளது.. மேலும் அடுத்த மூன்று நாட்களில் சுமார் 30 லட்சம் கனமீட்டர் தண்ணீர் அதில் சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஏரியின் தடுப்பு உடைந்தால், பெருமளவு தண்ணீர் திடீரென கீழ்நோக்கி பாய்ந்து நேபாளத்தில் மீண்டும் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் தற்போது அணை உடைந்துள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

தேடுதல் பணி தீவிரம்

புதன்கிழமை பேரழிவுக்கு பிறகு, நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 3,253 பேர் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக நேபாளம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அங்குள்ள நீர்மின் திட்டத்தின் சுரங்கத்திற்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து நேபாள ராணுவம் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. சுரங்கத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் சேற்றால் மூடப்பட்டுள்ளதால் அவர்களைக் கண்டறிவதும் சவாலாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் திபெத்தில் ஏரி உடைந்து, மீண்டும் வெள்ளம் ஏற்படும் என்ற தகவல் மீட்புப் பணிகள் மேலும் சிக்கலாகலாம் என அஞ்சப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *