Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று தோனி விரும்புகிறார். ஆனால் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் யாரும் இல்லாததால், ஹேமங் பதானியின் பெயரே பட்டியலில் முதலில் இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் ஃபிளமிங் விலகினார். 18 ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளருக்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பு தோனி வசமும் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாகவே தோனி அண்மையில் லண்டன் சென்று வந்திருந்தார்.

அப்போது இயன் மோர்கனுடன் தோனி சந்திப்பு நடத்தியதாக சொல்லப்பட்டது. மறுபக்கம் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்க மைக் ஹசி சம்மதிக்கவில்லை. இதனால் மைக் ஹசிக்கு சிஎஸ்கே அணி புரமோஷன் கொடுக்கும் என்று பேச்சுகள் எழுந்தன. ஆனால் செப்டம்பர் 20ஆம் தேதி தான் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
அதேபோல் காசி விஸ்வநாதன், சிஎஸ்கே நிர்வாகம் வெளிநாட்டு பயிற்சியாளரை தான் பரிசீலனை செய்து வருவதாக கூறி இருந்தார். இந்த நிலையில் திடீரென சிஎஸ்கே பயிற்சியாளர் பொறுப்புக்கு ஹேமங் பதானி பயிற்சியாளராக பரிசீலனை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னணியிலும் தோனி இருந்திருக்கிறார்.
சிஎஸ்கே, ஜேஎஸ்டி மற்றும் டிஎஸ்கே என்று 3 அணிகளுக்கும் அல்லாமல், சிஎஸ்கே அணிக்கு பிரத்யேக பயிற்சியாளரை நியமிக்க தோனி அறிவுறுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இந்தியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டியதாக தெரிகிறது. இதனால் ஹேமங் பதானியின் பெயர் பரிசீலனை பட்டியலில் இணைந்திருக்கிறது.
அவர் ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக 2 ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். இதனால் ஓரளவிற்கு இந்திய வீரர்களுடன் ஹேமங் பதானியால் இணைந்து சிறப்பாக செயல்பட முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மார்க்கெட்டில் இந்திய பயிற்சியாளர்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்து வருகிறது.
இதனால் இன்னும் 2 வாரங்களுக்குள் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் அறிவிக்கப்பட்ட பின், ஹர்திக் பாண்டியா தொடர்பான டிரேட் டீல் குறித்த முடிவுகளும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
