International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடாவில் தனது ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மீண்டும் நுழைய முயல்கிறது. சுமார் 55 ஆண்டுகளாக இந்த பக்கமே வராமல் இருந்த பாகிஸ்தான் திடீரென வங்காள விரிகுடா பக்கம் வர என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் நல்லுறவு இருந்ததே இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இதற்கிடையே கடந்த 55 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடா பக்கம் எட்டிப் பார்த்து இருக்கிறது.

பின்னணி
ஹங்கோர் என்ற பெயர் இந்தியப் பாகிஸ்தான் கடற்படை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வடு. 1971ம் ஆண்டு போரின் போது, பாகிஸ்தானின் ‘பிஎன்எஸ் ஹங்கோர்’ நீர்மூழ்கிக் கப்பல், இந்தியாவின் ஐஎன்எஸ் குக்ரி போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று போர்க்காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும். தற்போது, 55 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஹங்கோர் என்ற பெயரில் புதிய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் கடற்படையில் இணைந்துள்ளது.
ஒப்பந்தம்
பாகிஸ்தான் தனது கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சியில் சீனாவிலிருந்து 8 ஹங்கோர்-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதல் கப்பல் கடந்த வாரம் கராச்சி வந்தடைந்தது. இது ஏர்-இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதனால் நீண்ட நாட்கள் நீருக்கடியில் மறைந்திருக்க முடியும், எதிரிகளால் இதைக் கண்டறிவது கடினம். இது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
1971 போரில் வங்கதேசம் உருவான பிறகு, வங்காள விரிகுடாவில் பாகிஸ்தானின் ஆதிக்கம் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாகிஸ்தான் கடற்படை அரபிக்கடலோடு மட்டுமே சுருங்கிப் போனது. ஆனால், தற்போது இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் வங்காள விரிகுடாவிற்குள் மீண்டும் நுழையப் பாகிஸ்தான் திட்டமிடுகிறது. சமீபத்தில் இலங்கையில் பேசிய பாகிஸ்தான் கடற்படை அதிகாரி ஓமர் ஃபாரூக், “இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வங்காள விரிகுடாவில் பாகிஸ்தானின் இருப்பைத் தக்கவைக்க உதவும்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
என்ன காரணம்
பாகிஸ்தானின் இந்தத் திட்டத்திற்கு வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ந்த பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மற்றும் தாரிக் ரஹ்மான் தலைமையிலான சூழலில், பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான உறவு மேம்பட்டுள்ளது. 1971-க்குப் பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தான்- வங்கதேசம் இடையே நேரடி கடல்வழி வர்த்தகம் தொடங்கியுள்ளது.
வங்கதேச விமானப்படைத் தளபதி பாகிஸ்தானுக்குச் சென்று ஜேஎஃப்-17 போர் விமானங்களை வாங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 1971-க்குப் பிறகு முதல்முறையாக 2025 நவம்பரில், பாகிஸ்தானின் பிஎன்எஸ் சைப் போர்க்கப்பல் வங்கதேசத் துறைமுகத்திற்கு வந்து சென்றது.
கவனிக்கும் இந்தியா
இந்த மாற்றங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. ஏனென்றால் வங்காள விரிகுடா இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியமானது. விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படைத் தளம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவை. பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல்கள் இங்கு நடமாடுவது இந்தியாவிற்கு ஒரு தொந்தரவாக அமையலாம். இருப்பினும், 1971ல் இருந்ததை விட இன்று இந்தியக் கடற்படை பல மடங்கு வலிமையானது. இந்தியாவிடம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நவீன கண்காணிப்பு வசதிகள் உள்ளன.
பதிலடி இருக்கு
பாகிஸ்தான் தனது பழைய ‘ஹங்கோர்’ வெற்றியை அடையாளமாக வைத்துக்கொண்டு மீண்டும் வங்காள விரிகுடாவில் கால் பதிக்க முயல்கிறது. வங்கதேசத்துடனான அதன் வளர்ந்து வரும் உறவு இதற்குப் பாதையை அமைத்துக் கொடுக்கிறது. அதேநேரம் பாகிஸ்தானின் நடமாட்டத்தை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. சிறிய தவறு செய்தாலும் இந்த முறை பாகிஸ்தானுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் என்பதில் சந்தேகம் இல்லை!