மும்பை காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆசிப் ஃபரூக்கி இது குறித்து கூறுகையில், “‘இது போன்ற ஒரு தடையை அமல்படுத்தினால், அது சமூக விரோத சக்திகளை சிக்கலைத் தூண்ட வழிவகுக்கும். ஒவ்வொரு தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் விலங்கு பலியிடப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க மாநகராட்சி மற்றும் காவல்துறையிடம் ஆள்பலம் இல்லை. சமூக வளாகத்தில் ஆடு வெட்டுவதை எந்தச் சங்க உறுப்பினரும் எதிர்க்காவிட்டால், அது வெளியாட்களை எப்படி தொந்தரவு செய்யும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மும்பை புறநகர் பகுதியான மீரா ரோடு பகுதியில் பக்ரீத் பண்டிகைக்காக முஸ்லிம்கள் ஆடுகளை வாங்கிக்கொண்டு வந்து தங்களது குடியிருப்பு வளாகத்தில் தற்காலிக குடில் ஒன்றை அமைத்து அதில் அடைத்திருந்தனர். மொத்தம் 25 ஆடுகள் அதில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்காலிக குடில் அமைக்க குடியிருப்பு கட்டட கமிட்டியில் ஒப்புதல் பெறப்படவில்லை என்று கூறி, சில குடியிருப்புவாசிகள் ஆடுகளை குடியிருப்பு வளாகத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து சில பா.ஜ.க நிர்வாகிகளும், சில குடியிருப்பாளர்களும் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸாரும், மாநகராட்சியினரும் வந்து தற்காலிக குடிலை இடித்தனர். ஆனாலும் ஆடுகள் தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இரவில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.