Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியுடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கான திட்டத்தில் ரோகித் சர்மா இல்லை என்று தேர்வுக் குழு தரப்பிலும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் கொடூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனிடையே நேற்றைய ஆட்டத்தின் போதே ரோகித் சர்மா, விராட் கோலியுடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அதேபோல் ஒளிபரப்பாளர்கள் மீண்டும் மீண்டும் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் சாதனையை போட்டு காட்டிக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் நெருங்கிய நண்பர் தேவேந்திர பாண்டியா ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டியே ரோகித் சர்மாவின் கடைசி கிரிக்கெட் போட்டியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். இது ரோகித் சர்மாவின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வந்தார்.
தேர்வுக் குழு ஒவ்வொரு முறை ரோகித் சர்மாவை நீக்க முயற்சிக்கும் போதெல்லாம் அதிரடியான ஃபார்மில் மிரட்டி வந்தார். ஃபிட்னஸ் குறித்த கேள்வி எழுந்த போதும், உடனடியாக உடல் எடையை குறைத்து கம்பேக் கொடுத்தார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஃபார்மும், டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனின் தேவையும் ரோகித் சர்மாவுக்கு சிக்கலை உருவாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது,
தென்னாப்பிரிக்காவில் ரோகித் சர்மாவும் பெரியளவில் ரன்களை சேர்த்ததில்லை. இங்கிலாந்து மண்ணிலேயே ரோகித் சர்மா சொதப்பி வருவதால், அவரிடம் நேரடியாக பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் பேசி இருக்கின்றனர். இதனால் ரோகித் சர்மா ஓய்வு முடிவை நோக்கி தள்ளப்பட்டுவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.