அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அது போன்று உண்டியல் பணம் திருடப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
மும்பையில் மிகவும் பிரபலமானது சித்திவிநாயக் கோயில். இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல் பணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி அளவுக்குத் திருட்டு நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டி இருந்தார்.
இக்கோயில் அறங்காவலர்கள் சிலர் மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு எழுதிய கடிதத்தை ராஜ் தாக்கரே வாசித்து இக்குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
அக்கடிதத்தில், “சில ஊழியர்கள் பணம் திருடி பிடிபட்டுள்ளனர். அவர்கள் பிடிபடுவதற்கு முன்பு, ஒவ்வொரு புதன்கிழமையும் காணிக்கைப் பெட்டியில் சேரும் தொகை ரூ. 50 லட்சத்திற்குள் இருந்தது.

ஆனால் அவர்கள் பிடிபட்ட பிறகு, கடந்த மூன்று வாரங்களில் அந்தத் தொகை சுமார் ரூ. 1.5 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம், முன்னதாகவே குறிப்பிட்ட அளவு பணம் காணாமல் போய்க்கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. இதனால் கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 18 கோடி இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதில் உயர் மட்டத்தினர் யாருக்கோ தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் வலுவாகச் சந்தேகிக்கிறோம். எனவே இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்,” என்று அந்தக் கடிதத்தில் உள்ள விவரங்களை அவர் குறிப்பிட்டார். இக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக சிவசேனாவை சேர்ந்த சதா சர்வான்கர் இருக்கிறார்.
சிவசேனாவின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சதா சர்வான்கர் இது குறித்து அளித்த பேட்டியில், “மார்ச் மாதம் ஒன்பது ஊழியர்களைத் திருட்டு குற்றத்திற்காகப் பிடித்துள்ளோம். திருட்டை நாங்கள் நிறுத்தியவுடன், கோவிலின் வருமானம் மாதத்திற்கு ரூ. 40-45 லட்சத்தில் இருந்து ரூ. 80-90 லட்சமாக அதிகரித்தது,” என்றார்.