மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன? | Custard Apple Grows on Mango Tree in Mumbai: Video Goes Viral

Spread the love

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்திருக்கிறார். இவரது வீட்டில் 7 ஆண்டு பழமையான மாமரம் ஒன்று இருக்கிறது. இந்த மாமரத்தில் தற்போது மாம்பழங்கள் காய்க்க ஆரம்பித்து இருக்கிறது. அனைத்து கிளைகளிலும் மாங்காய் காய்த்திருந்த நிலையில் ஒரு கிளையில் மட்டும் சீதாப்பழம் காய்த்திருந்தது.

அதனை ஜெயேஷ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2ம் தேதிதான் பார்த்தார். உடனே அப்பெண் இது குறித்து தனது தாயார் மற்றும் பாட்டியிடம் தெரிவித்தார். ஆரம்பத்தில் இதனை அவர்கள் நம்பவில்லை. அதன் பிறகு நேரில் சென்று பார்த்து உறுதி செய்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

மாமரத்தில் சீதாப்பழம்

மாமரத்தில் சீதாப்பழம்

இந்தச் செய்தி அப்பகுதி முழுக்க காட்டுத்தீயாகப் பரவியது. அப்பகுதி மக்கள் வந்து பார்த்து சென்றனர். ஜெயேஷ் நண்பர் ஜிதேந்தர் அதனை ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். அது இப்போது வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஜெயேஷ் வீட்டிற்கு சீதாப்பழத்தைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை என்று வேளாண் ஆராய்ச்சியாளர் டாக்டர் வைசாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “‘சாதாரண சூழ்நிலைகளில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படுவது மிகவும் சாத்தியமற்றது. ஒரே மரத்தில் பல்வேறு வகையான மாம்பழங்களை வளர்க்க விவசாயிகள் ஒட்டுக்கட்டுதல் நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், ஒரு மாமரத்தில் சீதாப்பழம் வளர்வது மிகவும் அரிதானது.

இரண்டுமே வெவ்வேறு தாவர இனங்கள். ஒரு சீதாப்பழ விதை தற்செயலாக மாமரத்தின் இடுக்குகளில் சிக்கி வளரத் தொடங்கியிருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில சமயங்களில் பறவைகளோ அல்லது தேனீக்களோ மகரந்தச் சேர்க்கை முகவர்களாகச் செயல்பட்டிருக்கலாம்,” என்றார் அவர்.

இதற்கான காரணத்தைக் கண்டறிய, அந்த மரத்தை இன்னும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வைசாலி மேலும் கூறினார்.

தற்போதைக்கு, இந்த நிகழ்வு ஒரு இயற்கைக்கு முரண்பாடான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இது குறித்து செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி முன்னாள் தாவரவியல் தலைவர் ராஜேந்திர ஷிண்டே கூறுகையில், “ஒரு மாமரத்தில் சீத்தாப்பழத்தைப் பயிரிடுவது சாத்தியமற்றது. இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) தந்திரமாகவோ அல்லது அதுபோன்ற வேறொன்றாகவோ இருக்கலாம்,” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *