`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ – திமுக – காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

Spread the love

“தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…!’

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற சூழல்தான் புதுச்சேரி மக்கள் மத்தியில் நிலவியது.

ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்குள் நடைபெற்ற குழப்பத்தின் காரணமாக, இந்த தோல்வியை நாங்கள் சந்தித்துள்ளோம். இந்த தேர்தலில் பணிபுரிந்தவன் என்ற முறையில் நானும் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

வெற்றியைக் கொண்டாடும்போது, தோல்வியடையும் நேரங்களில் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். பணபலம், அதிகார பலத்தை வைத்து என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

காங்கிரஸ் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். ஆனால் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பிரதமர் மோடியின் ஏஜெண்டுகள் ஆளுநர்களாக இருப்பதால் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இது புதுச்சேரி மக்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்யும் துரோகம்.

முதல்வர் ரங்கசாமிக்கு நாற்காலி மட்டும் தேவை. பா.ஜ.க சொல்லும் அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஐந்தாண்டுகள் தலையாட்டி பொம்மையாக இருப்பார். இது புதுச்சேரி மக்களின் தலைவிதி. வாக்களித்தவர்கள் சிந்தித்து வாக்களித்து இருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகள் புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இருக்காது. புதிய தொழிற்சாலைகள் வராது. புதிய திட்டங்கள் இருக்காது. அரைத்த மாவையே அரைப்பார்கள். புதுச்சேரியில் முதல்வருடன் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

“அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம்…”

இன்னும் மூன்று அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்கவேண்டும். அதில் இழுபறி நீடிக்கிறது. அமைச்சர் பதவிக்கு பேரம் பேசப்படுவதாக பொதுவெளியில் தகவல்கள் வருகின்றன. ஒரு அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் பேசப்படுகிறது. அமைச்சரவை அமைக்கும் முன்பாகவே ஊழல் இருந்தால் இந்த ஆட்சி எப்படி இருக்கும்.

புதுச்சேரிக்கு தொடர்பில்லாதவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என கனவு காண்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகிவிட வேண்டும் என்று புதுவைக்கும், டெல்லிக்கும் காவடி தூக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிப் போகிறது.

முதலமைச்சர் முதுகெலும்பு இல்லாதவர். அமித் ஷா சொல்வதை கேட்காவிட்டால் முதல்வரின் நாற்காலிக்கு ஆபத்து. இதையெல்லாம் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். அமைச்சர் நியமனம் தாமதமாவதற்கான காரணம் என்னவென்று முதல்வர் ரங்கசாமி பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும்.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் – ராகுல் காந்தி

தமிழக முதல்வர் விஜய்க்கு முதல்வர் ரங்கசாமி நண்பர். விஜய் பதவியேற்பில் ஊழல் செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக பதவியேற்பில் தெரிவித்தார். அதேபோல் விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமியும் விஜய் பாணியில் செயல்படுவாரா? ஆரம்பமே கோணலாக அமைச்சர் பதவிக்கு ஏலம் போகிறது. தற்போது ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாகி இன்னும் தாமதமானால் ரூ.150 கோடியாகும்” என்றார்.

தொடர்ந்து, `தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் த.வெ.க கூட்டணியா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தமிழக முதல்வர் விஜய் முதல்வர் பதவியேற்பில் எங்கள் தலைவர் ராகுல் பங்கேற்றிருக்கிறார். அதன்மூலம் த.வெ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது” என்று பதிலளித்தார்.

அதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறியபோது, தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்காரர்கள் குறைந்தபட்சம் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தேர்தலில் இணைந்து பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கலாம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *