தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.
அவற்றுள் மிகவும் கவனம் பெற்றது, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை. நீண்டகாலமாக இக்கடை அப்பகுதி மக்களுக்கும் பெண்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது.
பேருந்து நிலையம் என்பதால் இருபத்தி நான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால், மதுப் பிரியர்களின் செயல்களால், பெண்கள் அப்பகுதியில் நடந்து செல்லவே அஞ்சினர்.
இக்கடையை மூட வேண்டும் என்று பொதுமக்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக கோரிக்கைகள் தொடர்ந்த நிலையில், புதிய அரசின் உத்தரவுப்படி இக்கடைக்கு நிரந்தரப் பூட்டு விழுந்தது.