"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" – பெ.சண்முகம்

Spread the love

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தான் சட்டமன்றம் இருக்கும் என்றால் சட்டமன்றமே வேண்டாம் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சட்டமன்றம் மக்களின் வரிப்பணத்தில் தான் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களுடைய சொந்தப் பணத்தில் நடக்கவில்லை. சட்டமன்றத்தில் முறையாக நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

வீணான விவாதங்களில் சட்டமன்றத்தின் நேரங்கள் விரையமாவதை நாங்கள் எதிர்க்கிறோம். அப்படி நேரம் விரையமாகக்கூடாது என்ற நோக்கில் ஆளுங்கட்சி நடந்துகொள்ள வேண்டும்.

ஊழல் விஷயத்தில் எங்களை விட எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்ப்போம். காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வர் பதில் சொன்னாரா? அவர் பேசுவதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது.

ஆனால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கூட முறையாக பதில் சொல்லவில்லை. இப்படி எப்போதும் நடந்தது கிடையாது. தவெக அமைச்சருக்கு நான் பணிவாக தெரிவித்துகொள்வது என்னவென்றால் முதலில் நீங்கள் படியுங்கள்.

மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதெல்லாம் சிறுபிள்ளை தனம். அறியாமையில் இருந்து வெளிவரக்கூடிய கருத்து.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

மிசா தொடர்பாக நிறைய ஆவணங்கள் இருக்கிறது அதை முதலில் படியுங்கள். சர்க்காரியா கமிஷனில் யாரும் கைது செய்யப்படவில்லை. மூன்று கோப்புகள் கையில் இருப்பதாக முதல்வர் சொன்னார். ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே இல்லாமல் சர்க்காரியா கமிஷன் பற்றி ஏன் பேசுகிறார். திசை திருப்பும் தந்திரம் இது” என்று தவெகவை சாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *