`மெடல்கள் குவித்தவர்; அவரை மனநல மருத்துவமனையில்…' – தடகள வீராங்கணைக்கு பெற்றோரால் நேர்ந்த துயரம்!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சின்னகுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காளமூர்த்தி. இவரது மகள் நிதிஷா(21). தடகள வீராங்கணையான இவர் போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மெடல்கள் குவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றால் பெற்றோர் சம்மதத்துடன் பட்டுக்கோட்டை நம்பிவயலை சேர்ந்த ஹரிஹரன் – சொர்ணப்பிரிய தம்பதி பராமரிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வந்தார். இந்நிலையில் ஹரிகரன் வீட்டிற்கு சென்ற பெற்றோர் நிதிஷாவை அடித்து தரதரவென இழுத்து சென்றனர்.

விளையாட்டு வீராங்கணை நிதிஷா

அவர், `என்னை விடுங்க’ என்று கதறியும் கேட்காமல் அவரது தந்தை உள்ளிட்டோர் இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பதறவைத்தது. நிதிஷாவை அழைத்து சென்ற பெற்றோர் அவரை திருச்சியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சேர்த்தது பெரும் கொடுமை என்கிறார்கள். இதையறிந்த ஹரிஹரன் தரப்பு, சிறந்த விளையாட்டு வீராங்கணையான மாணவியின் வாழ்க்கையை அவரது பெற்றோர் சீரழிப்பதாக சிங்கப்பெண் படைக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மனநல மருத்துவமனைக்கு சென்ற சிங்கப்பெண் படை போலீஸார் நிதிஷா மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இதையடுத்து நிதிஷா பாதுகாப்பாக தஞ்சாவூர் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நிதிஷாவின் பெற்றோருக்கு கடன் இருப்பதாகவும், இதற்காக அவரை விருப்பமில்லாமல் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாகவும், இதற்கு நிதிஷா ஒத்துழைப்பு கொடுக்காததால் மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டதாகவும் பகீர் கிளப்புகின்றனர்.

மெடல்

இதுகுறித்து ஹரிஹரன் நம்மிடம், “நிதிஷா பி.எஸ்.சி கல்லூரி படிப்பை தற்போது தான் முடித்துள்ளார். விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போதும் பல தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்கான சான்றிதழ்களும், மெடல்களும் குவித்து வைத்துள்ளார். ஒரு சிறந்த தடகள வீராங்கணையான நிதிஷா சமூக ஆர்வலராகவும் திகழ்பவர். இதற்காக அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் பாராட்டு வாங்கியுள்ளார்.

என் மகளும், நிதிஷாவும் ஒன்றாக கோச்சிங்கில் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்பு நிதிஷாவால் சரியாக விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. என்னவென்று விசாரித்ததில் வீட்டில் அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டதும், அதனால் மன உளைச்சலில் இருந்ததும் எங்களுக்கு தெரிந்தது. உடனே நாங்கள், நிதிஷா பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் வீட்டில் வைத்து எங்கள் மகளுடன் சேர்த்து இவரையும் மகளாக வளர்த்தோம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் நிதிஷா

நிதிஷாவும் பழையபடி விளையாட்டில் ஜொலித்தாள். குடும்ப சூழ்நிலை சரியில்லை, நான் வேலைக்கு போய் எல்லாத்தையும் மாத்தணும் என சொல்லிக்கொண்டிருப்பார். ஒரு வேலைக்கு போய் நீ சுயமா நிமிர்ந்து நின்னுட்டா எல்லாம் சரியாகிடும் என்று நாங்க உற்சாகப்படுத்துவோம். கடந்த மாதம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை கேட்டு கோரிக்கை வைத்தார் நிதிஷா. சான்றிதழ்களை பார்த்துட்டு அமைச்சரும் பாசிட்டிவா சொல்லி அனுப்பினார்.

கடந்த இரண்டு வருடங்களாக எங்கள் பராமரிப்பில் தான் இருக்கிறார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு நிதிஷாவின் பெற்றோர் ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்தில் எங்கள் மீது பொய் புகார் அளித்தனர். போலீஸ் அழைத்து விசாரிக்கையில் நிதிஷா எங்களுடன் இருப்பதாக சொல்லிவிட்டார். இததொடர்ந்து, அவ்வப்போது எதவாது பிரச்னை செய்து கொண்டே இருப்பார் நிதிஷாவின் அப்பா கங்காளமூர்த்தி. உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டியவளை தந்தையே பின்னுக்கு தள்ளும் செயல்களை செய்தார்.

நிதிஷா

நேற்று காலை எங்கள் வீட்டுக்கு வந்து நிதிஷாவை எப்படி அடித்து இழுத்துச் சென்றனர் என்பதை ஊரே பார்த்து பதறியது. நல்லா இருக்கும் மகளை மனநல மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்றால் பெற்றோரை மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் இப்படியா செய்வார்கள். அரசு இதில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நிதிஷாவுக்கு நல்ல வாழ்க்கை அமைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *