மேகதாது அணை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது.. கர்நாடகாவின் பொய்யை அம்பலமாக்கிய CWC கடிதம் | Mekedatu Dam violates the Supreme Court verdict; CWC letter exposes Karnataka’s falsehood

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

சென்னை: மேகதாது அணை மூலம் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுக்கு ஒதுக்கிய நீரை விட கூடுதல் நீரைப் பயன்படுத்த கர்நாடகா அரசு முயன்றிருப்பது அண்மையில் மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commission) எழுதிய கடிதம் ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பதிவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு 2019ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை (Detailed project Report DPR) தயாரித்து அதை மத்திய நீர்வள ஆனையத்தின் ஒப்புதலுக்கு கர்நாடகா அரசு அனுப்பியிருந்தது. இதை எதிர்த்துதான் தமிழ் நாடு அரசு தொடர்ந்து பல்வேறு சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த DPRல் புதிதாகச் சில கூறுகளைச் சேர்க்குமாறு கடந்த 21.04.2026 அன்று கர்நாடக அரசு CWCக்கு கடிதம் எழுதியிருந்தது, அதைப் பரிசீலித்த CWC கர்நாடக அரசின் கோரிக்கை காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018 பிப்ரவரி 16 வெளியான தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகக் கருதி அதை மீண்டும் கர்நாடகா அரசுக்கே 29.06.2026 அன்று திருப்பி அனுப்பி விட்டது.

Mekedatu Dam violates the Supreme Court verdict CWC letter exposes Karnataka s falsehood

2019ஆம் ஆண்டு கர்நாடகா அரசு சமர்ப்பித்த DPRல் பெங்களூர் நகரின் குடிநீர்த் தேவைக்கான 4.75 TMC நீரை மேகதாது அணை மூலம் எடுத்துக்கொள்ளும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை 6.95 TMC ஆக உயர்த்தியுள்ளது. இது கர்நாடக அரசு முன்பு கூறியதைவிட 2.2 TMC அதிகமாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 6.50 TMC நீர் மட்டுமே கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு மாறாக கூடுதல் நீரைப் பயன்படுத்தக் கோர முடியாது என CWC தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கர்நாடக அரசு பெங்களூர் நகரத்தின் குடிநீர்த் தேவைக்காகவும் பிற நீர்த் திட்டங்களுக்காகவும் எவ்வளவு நீரை இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிற தரவுகளை 2019ல் சமர்ப்பித்த DPR மற்றும் 21.04.2026 எழுதிய கடிதத்திலும் குறிப்பிடப்படவில்லை. மேகதாது அணையில் 60 TMC நீரைத் தேக்கி வைப்போம் எனக் கர்நாடகா அரசு கூறியிருப்பதன் தேவை என்ன என்பதற்கான போதுமான தரவுகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் CWC தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

CWC கர்நாடகா அரசுக்கு எழுதிய கடிதம் இத்தனை ஆண்டுகாலம் தமிழ் நாடு அரசு முன்வைத்த அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை நிரூபிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத்தான் புதிதாக அணை கட்டுகிறோம் என கர்நாடகா அரசு கூறிவந்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி மேகதாது அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

“காவிரி நீர் தொடர்பான பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு. கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும், அத்தீர்ப்பில், காவிரி நீர் தீர்ப்பாயம் 2007-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும், எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் உரிமை, அதிகாரம் அல்லது ஆற்றலை குறைக்கவோ பாதிக்கவோ கூடாது.” என மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக ஒன்றிய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசுக்கு ஒரு நதிக்கரையில் மேல்நிலையில் உள்ள மாநிலம் கடைமடைப் பகுதியில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலின்றி அணை கட்டக்கூடாது என்பது தெளிவாகத் தெரியும் காவிரி தொடர்பான 2018 தீர்ப்பிலும் இது நேரடியாகவும் மறைமுகமாகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு சிறு பகுதியை மட்டும் தனது பதிலில் சேர்த்துள்ளது ஒன்றிய அரசு.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில கருத்துகளையும் முந்தைய தீர்ப்புகளின் மேற்கொள்களையும் நதிக்கரை மாநிலங்களுக்கு காவிரி ஆற்றின் மீதான உரிமையை அடிப்படையாகக் கொண்டு படித்தால் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என்பது விளங்கும்.

கர்நாடகா அரசு, காவிரி படுகையில் தனது எல்லைக்குள் உருவாகும் நீரின் மீது தனக்கு உரிமை உண்டு என்று கருதி மேகேதாது திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இது, உச்ச நீதிமன்றம் 22.11.1991 அன்று வழங்கிய தீர்ப்பில் (Presidential Reference No. 1/91) கூறப்பட்டதற்கு முரணானது. பின்வருமாறு அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

“Though the waters of an inter-State River pass through the

territories of the riparian States such waters cannot be said to be

located in any State. They are in a state of flow and no State can

claim exclusive ownership of such waters so as to deprive the other

States of their exclusive share.”

அதாவது மாநிலங்களுக்கிடையேயான ஆறு ஒன்று, நதிக்கரை மாநிலங்களின் பிரதேசங்கள் வழியாகச் செல்லும் நீரைக் கொண்டிருந்தாலும், அந்த நீர் எந்த ஒரு மாநிலத்திலும் அமைந்துள்ளது என்று கூற முடியாது. அது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில் உள்ளது, மேலும் எந்த மாநிலமும் மற்ற மாநிலங்களின் நியாயமான பங்கை இழக்கச் செய்யும் வகையில் அத்தகைய நீரின் மீது தனக்கே உரிய முழுமையான உரிமையை கோர முடியாது என்று கூறுகிறது. இது 16.02.2018 அன்றைய தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் Presidential Reference No. 1/91ல் “மாநிலங்களுக்கிடையேயான ஆற்றின் நீர் ஒரு தேசிய சொத்து என்றும், எந்த மாநிலமும் அதன் மீது தனக்கே உரிய முழுமையான உரிமையை கோர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.” இதுவும் 16.02.2018 தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகா அரசு தனது காவிரி படுகையில் உருவாகும் நீரின் மீது முழு உரிமை கோர முடியாது,

மேலும் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்றைய தீர்ப்பில் காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவில் Clause XI பின்வருமாறு கூறியிருப்பதையும் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளது:

“further directed that the upper riparian State shall not

take any action so as to affect the scheduled deliveries of water to

the lower riparian States.”

அதாவது இதன்படி பார்த்தால் கர்நாடக அரசானது, கீழ்நிலை நதிக்கரை மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீர் விநியோகங்களைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அர்த்தமாகும். எனவே, கபினி மற்றும் பிலிகுண்டுலு இடையேயும், கே.ஆர்.எஸ். மற்றும் பிலிகுண்டுலு இடையேயும் உள்ள நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து (intermediate catchment) வரும் நீரோட்டங்கள் உட்பட, தமிழ்நாட்டுக்கு நீர் ஒதுக்கீடு செய்யும் போது தீர்ப்பாயத்தால் கருத்தில் கொள்ளப்பட்ட நீரோட்டங்களைப் பாதிக்கக்கூடிய எந்த சுயமான நடவடிக்கையையும் கர்நாடகா எடுக்கக் கூடாது.

2019ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழான சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. அதைப் பரிசீலித்த நிபுணர் குழு மேகதாது அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை கர்நாடக அரசிற்கு வழங்கவில்லை. “இத்திட்டத்திற்கு ஆய்வு எல்லைகளை வழங்கக்கூடாது என்று தமிழக அரசு கோரியுள்ளதால் இரு மாநிலங்களுக்கிடையே சுமூகமான தீர்வு ஏற்பட வேண்டும். ஏற்பட்டால் மட்டுமே மறுபரிசீலனை செய்ய முடியும் என மதிப்பீட்டுக்குழு முடிவு செய்துள்ளது.” எனக்கூறி கர்நாடக அரசின் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது.

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதியின்றி மேகதாது அணையக் கட்ட முடியாது. ஆனால், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவோ தமிழ் நாடு அரசின் இசைவின்றி திட்டத்தைப் பரிசீலிக்க முடியாது எனக்கூறி விட்டதால் தமிழ் நாடு அரசின் ஒப்புதலின்றி கர்நாடக அரசால் மேகதாது அணையைக் கட்ட முடியாது.

ஆகவே, காவிரி நீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை கூர்ந்து அலசும் பட்சத்தில் தமிழ் நாடு உள்ளிட்ட நதிக்கரை மாநிலங்களின் ஒப்புதலின்றி கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்ட முடியாது மற்றும் அப்படி முயல்வது சட்டவிரோதமாகும்.

ஒருவேளை கர்நாடகா முதலமைச்சரை இவ்விவகாரம் தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் சந்த்தித்தாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக எதையும் செய்யாதீர்கள் எங்களுக்கு உரிமையான நீரைத் தடுக்காமல் உடனடியாகத் திறந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு வரவேண்டுமே தவிர புதிதாக இச்சிக்கலுக்குச் தீர்வுகளை விவாதித்தால் அதனால் இழப்பு தமிழ் நாட்டுக்குத்தான் ஏற்படும் என்ற எச்சரிக்கையோடு இதை அணுக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்றில் நீரைப் பகிர்வதில் சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கான அதிகாரம் அனைத்தும் ஒன்றிய அரசிடமே உள்ளது. இது தொடர்பான நதிநீர் தாவா சட்டம் மற்றும் பிற விதிகள் அனைத்திலும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களிடம் கலந்து பேசித்தான் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றே உள்ளது. அதற்கு மாறாக காவிரி விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்படக் கூடாது மற்றும் தமிழ் நாட்டின் உரிமை பறிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *