`மேகதாது அணை, தமிழ்நாடு கடன், சாதிவாரி கணக்கெடுப்பு, கனிமவளம்.!' – அர்லேகர் உரையின் ஹைலைட்ஸ்!

Spread the love

தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் கூடும் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இது.

வழக்கப்படி, ஆளுநரின் உரையுடன் தான் முதல் கூட்டத்தொடர் தொடங்கும். இன்று கூட்டத்தொடர் ஆளுநர் அர்லேகரின் உரையுடன் தான் தொடங்கியுள்ளது.

அர்லேகரின் உரையின் ஹைலைட்ஸ்:

> ஒன்றிய அரசிடம் LDIT 600T நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவுதல் மற்றும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்குதல் குறித்தும் கோரியுள்ளார் முதலமைச்சர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்

> கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடனின் அளவு ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்து, 10 இலட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. இது தற்போது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP) 28.3 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிநபர் மீதும் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை உள்ளது.

2024-25 ஆம் நிதியாண்டில் 48,840 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை, 2025-26 ஆம் நிதியாண்டில் 78,324 கோடி ரூபாயாக ஒரே ஆண்டில் உயர்ந்து, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP) 2.2 சதவீதமாக உள்ளது.

> மொத்த வருவாய் வரவுகளில் கிட்டத்தட்ட 23 சதவீதம் வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. வருவாய் இழப்புகள் மற்றும் வரி வசூல் துறைகளில் நிலவும் திட்டமிட்ட ஊழல் காரணமாக, 2021-22 ஆம் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5.93 சதவீதமாக இருந்த வரி வருவாய், 2025-26 ஆம் நிதியாண்டில் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

> மிகவும் சவாலான நிதி நெருக்கடியினை தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் வேளையிலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்புடன், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நுகர்வோரின் மின் கட்டணத்தினைக் குறைத்திடும் விதமாக…

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்

அரசிற்கு ஏற்படக்கூடிய 1,730 கோடி ரூபாய் செலவில், இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினை உருவாக்கவும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினை ஏற்படுத்தவும் ஆணையிட்டுள்ளார் முதலமைச்சர்.

> கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு முழு மூச்சுடன் செயல்படும். இதனைச் செயல்படுத்தும் விதமாக, போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

> கனிமவளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய முறையான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்கத்தின் மூலம் திட்டமிட்ட சட்டவிரோத கனிமத் தொழிலும், வரி ஏய்ப்பும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகளின் வாயிலாக, கனிமங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர்

> ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க நாம் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும்.

> இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், அதனையே இந்த அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.

> தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். தேசியக் கொள்கையின்படி மும்மொழிக் கல்விக் கொள்கையை கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கப் பெற வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமமாகும்.

> மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், வேளாண் உற்பத்தியும் கடுமையாகப் பாதிப்படையும்.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

இதனைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிற்கான நீரை உரிய காலத்தில் பெற்றுத் தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.

> தென் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணையாகும். அங்கே கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.

> பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் ஒன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஏற்படுத்தப்படும். இந்த ஆணையத்தின் மூலம், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு விரைந்து தொழில் தொடங்க அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

> தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

> தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு ஆற்றல் மையமாக நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஒலிம்பிக் உயர்திறன் மையங்கள் (Olympic Centres of Excellence) அமைக்க இந்த அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முழு உரையையும் பார்க்க…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *