கடந்த ஜூன் 19-ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், `1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தின்படி, புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்பதைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதற்கு உடனடியாக ‘ஓகே’ சொல்லி, நடுவர் மன்றக் கோரிக்கையையும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானத்தில் சேர்த்தது, தவெக அரசு.
ஆனால், இந்த ‘நடுவர் மன்ற’க் கோரிக்கைக்கு அதிமுக, கம்யூனிஸ்ட் தொடங்கி விவசாய சங்கங்கள் வரை பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எடப்பாடி பழனிசாமியின் கேள்வி!
அதிமுக தரப்பில் இருந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் மேகதாது அணை குறித்த ஒரு நிலையான இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டன. அப்படித் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று இந்த அரசு கேட்பது எந்த நோக்கத்திற்காக?
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 15 ஆண்டுக்காலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.