2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், பல்வேறு தமிழ்த்தேசிய – திராவிட இயக்கங்களும் இனப்படுகொலை நாளுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது வாடிக்கை.
அவ்வகையில், மே17 இயக்கம் நேற்று (17.05.2026) மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில், தொடர்ச்சியாக 17 வது ஆண்டாக இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது.
நிகழ்வின் தொடக்கமாக, மையம் கலைக்குழுவினரால் பறையிசை முழக்கப்பட்டது.
அடுத்ததாக, இளம் வயது பெண்கள் குழுவினர் தமிழீழப் போராட்டத்தை போற்றும் பாடலொன்றை பாடினர்.
அதன் தொடர்ச்சியாக பேசிய, மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, மே 18 அன்று இனப்படுகொலை நாளை தமிழர்கள் அனுசரிக்க வேண்டியதன் அவசியத்தை கூறியதோடு, “முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான்” என அங்கீகரித்து அதில் ஈடுபட்ட இலங்கையையும் உதவிய இன்னபிற நாடுகளையும் போர்க்குற்றவாளியாக அறிவிக்க ஐ.நா சபை முன்னெடுப்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.