India
oi-Vigneshkumar
விசாகப்பட்டினம்: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் புதிய தலைமுறையினருக்கு அவரது போராட்ட வாழ்க்கை குறித்து எதுவும் தெரியாது என்று விமர்சித்துள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நாட்டுக்காக இடைவிடாமல் உழைக்கும் தலைவருக்கு கிடைக்கும் பரிசு இதுதானா ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை பெற்றோர் இதுபோல தவறான பாதையில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.
சமீபத்தில் நீட் வினாத்தாள் லீக் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்தே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான ராஜினாமா செய்தார். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட சில இளம் தலைமுறையினர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியிருந்தனர்.

பவன் கல்யாண்
அது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது குறித்து சிலர் புகாரளித்திருந்த நிலையில், வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இருப்பினும், பிரதமர் மோடி தன்னை பற்றி பேசிய இளம் தலைமுறையினரை மன்னிப்பதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கிடையே பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய இளம் தலைமுறையினரை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக சாடியுள்ளார்.
விசாகப்பட்டினம் அருகே போகாபுரத்தில் ரூ.5,700 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “ஒருவர் எவ்வளவு அதிகமாக உழைக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக விமர்சிக்கப்படுவார். ஆனால் இன்றைய புதிய தலைமுறைக்கு பிரதமர் மோடி கடந்துவந்த வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி தெரியாது. அவர் எத்தகைய சிரமங்களை கடந்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
மோடி மன்னித்தார்
அண்மையில் நடந்த மாணவர் போராட்டங்களின் போது பிரதமர் மோடிக்கு எதிராக.. அவரை அவமதிக்கும் வகையில் பலர் பேசினர். அந்த வார்த்தைகள் அவரது மனதை புண்படுத்தின. அவரது கண்கள் கலங்கின. இருந்தாலும் அவர்களை மன்னித்துவிட்டார். அப்படிப்பட்ட பிரதமரை நான் தலைவணங்குகிறேன். அவருடைய பெருந்தன்மை மிக பெரியது.
நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒருவருக்கு நாம் கொடுக்கும் கைமாறு இதுதானா? பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஒருபுறம் எதிரி நாடுகளை எதிர்கொள்கிறார். மறுபுறம் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களையும் சமாளிக்கிறார். அதோடு நாட்டுக்குள்ளேயே வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளையும் எதிர்கொண்டு இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்.
ஆந்திரா
இந்தியாவின் 144 கோடி மக்களின் கனவுகளை சிலர் பின்னோக்கி இழுக்க முயல்கிறார்கள். பலர் விமர்சித்தாலும் அந்த கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்வது ஒரே ஒருவர்தான். இந்த நாட்டில் பிரதமர் மோடிக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. இனியும் அப்படிப்பட்ட தலைவர் உருவாக மாட்டார். அவரை எவ்வளவு விமர்சித்தாலும், வட ஆந்திராவுக்கு சர்வதேச விமான நிலையம் கிடைத்தது, மாநிலத்திற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வந்தது. இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு எல்லாம் காரணம் பிரதமர் மோடி தான்.
இந்த போகாபுரம் சர்வதேச விமான நிலையம் உருவாக காரணமே பிரதமர் மோடி தான். நான் பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணிக்கு ஆதரவு அளித்தபோது பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கான பதில் ஆந்திராவுக்கான இதுபோன்ற நலத்திட்டங்கள் தான்” என்றார்.
பெற்றோருக்கு அறிவுரை
தொடர்ந்து பெற்றோருக்கு அறிவுரை வழங்கிய பவன் கல்யாண், “இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்துங்கள். சரியான மதிப்புகளையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள். சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்தையும் நம்பாமல், நாட்டின் நலனை புரிந்துகொள்ளும் தலைமுறையை உருவாக்க வேண்டும்.. ஒரு குடும்பத்தை நடத்துவதற்கே எவ்வளவு சிரமம் இருக்கிறது. அப்படியிருக்க 140 கோடி மக்களை கொண்ட நாட்டை வழிநடத்துவது சாதாரண விஷயம் அல்ல. அந்த பொறுப்பில் இருப்பவருக்கு தான் அதன் வலி தெரியும்.
அப்படிப்பட்ட தலைவருக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்? பிரதமர் மோடி விரும்பும் வரை அவர் அந்த பொறுப்பில் தொடர வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். நாங்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருப்போம்” என்றும் தெரிவித்தார்.


