Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ-அணி தொடரில், இலங்கை ஏ அணிக்கு எதிரான சூப்பர் ஓவர் தோல்விக்குப் பிறகு இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் போட்டி முடிந்த பின், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் விஷென் ஹலம்பகே, வைபவ் சூர்யவன்ஷியை வம்புக்கு இழுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷியை நோக்கி இலங்கை அணியின் ஹலம்பகே, “மேட்ச் முடிந்தது.. வீட்டுக்கு கிளம்பலாம்” என்று வம்பு இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 15 வயது வைபவ், அவரை நோக்கிச் சென்று தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மூத்த வீரர் நிரோஷன் டிக்வெல்லா தலையிட்டு இருவரையும் பிரித்து அனுப்பி வைத்தார்.

இந்தச் சர்ச்சை குறித்து இந்திய மூத்த அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பஹுதுலே பேசுகையில், இது துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவமாகும். ஆனால் எதிரணி அவரை எப்படி வம்புக்கு இழுத்தது என்பது நமக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை வைபவ் மிகவும் நிதானமான ஒரு பையன் தான்.
இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் வீரருக்கு நிறையப் பொறுப்புகள் உள்ளன. அவர் அனுபவத்தின் மூலம் இதைக் கற்றுக்கொள்வார். நிச்சயமாக உணர்வுகளை கட்டுப்படுத்த அவருக்கு மூத்த பயிற்சியாளர்கள் வழிகாட்டுவார்கள். அதேபோல் மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை வீரர்களுக்கும் ஒழுக்கம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
இது இருதரப்புக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். இத்தகைய தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி களத்தில் திடீரென விராட் கோலியையே பின்னுக்கு தள்ளும் வகையில் ஆக்ரோஷமாக செயல்பட்டது பலருக்கும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மைதானத்தில் உடல்ரீதியான மோதலில் ஈடுபட்டதால், ஐசிசி விதிமுறை 2.12-ன் கீழ் லெவல்-1 குற்றத்திற்காக வைபவ் சூர்யவன்ஷிக்கு அபராதமோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையோ விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் வயதை கருத்தில் கொண்டு ஐசிசி நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் உள்ளது.