International
oi-Halley Karthik
வாஷிங்டன்: ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் சேமிப்புக் கிடங்குகளைப் பாதுகாக்க நிலத்தடி சுரங்கப்பாதைகளை அமைத்து, அவற்றின் நுழைவாயில்களில் கண்ணிவெடிகளை வைத்துள்ளதாக சிஎன்என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிடம் தற்போது கிட்டத்தட்ட அரை டன் எடையுள்ள ஆயுதத் தரம் வாய்ந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கிறது. இந்த யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்க ராணுவத்திற்கு டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் உத்தரவிடக்கூடும். எனவேதான் ஈரான் இந்தத் தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதாவது, ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் சேமிப்பை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்ற அச்சத்தில், அதைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக நிலத்தடியில் பிரம்மாண்ட சுரங்கப்பாதைகளை அமைத்துள்ள ஈரான், அவற்றின் நுழைவாயில்களில் வெடிகுண்டுகளையும் கண்ணிவெடிகளையும் வைத்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஈரான் தனது அணுசக்திப் பொருட்களைப் பாதுகாக்கப் பல நிலத்தடி சுரங்கப்பாதைகளைத் தோண்டியுள்ளது. இந்தச் சுரங்கப்பாதைகளின் நுழைவாயில்கள் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களை அணுகுவது மிகவும் ஆபத்தானதாகவும், அதிக நேரம் எடுக்கும் செயலாகவும் மாறியுள்ளது.
இப்போதைக்கு ஈரான் இதை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். ஆனால், பிரச்சனை இத்துடன் முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். இந்த நடவடிக்கையால், அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்று வரும் அணுசக்தி பேச்சுவார்த்தை மேலும் சிக்கலாகியுள்ளது. ஈரானின் யுரேனியத்தை அகற்றி அழிப்பதற்கான ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இது பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம் ஈரானின் நடவடிக்கை தற்காலிக வெற்றியை கொடுத்திருக்கிறது. ஏனெனில் இவ்வளவு பாதுகாப்பாக, வெடிபொருட்களை நுழைவு வாயிலில் வைத்திருப்பதால், அமெரிக்கா என்னதான் முயற்சித்தாலும், யுரேனியத்தை கைப்பற்ற முடியாது. எனுவே, டிரம்ப் அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது. யுரேனியம் ஒரு மலைக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது, அதை யாரும் நெருங்க முடியாது என்று டிரம்ப் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
எது எப்படியோ!, இந்த பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சு, பெட்ரோல் விலை குறைந்தால் போதும் என்று உலக மக்கள் எதிர்பார்க்க தொடங்கியிருக்கின்றனர்.