ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே ஆண்டுக்கணக்கில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை.
இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கின்றன. இந்தத் தாக்குதல் கருங்கடல் அருகே வரை நீண்டுள்ளது. உக்ரைன் அருகில் தெற்கு பகுதியில் உள்ள கருங்கடலில் இத்தாக்குதல் நடந்து வருகிறது.
கடந்த வாரம் இது போன்று சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இத்தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கப்பல் சென்று கொண்டிருந்தபோது நடந்த ட்ரோன் தாக்குதலில் இக்கப்பல் சேதம் அடைந்துள்ளது. தற்போது இந்திய மாலுமிகள் இருக்கும் மேலும் ஒரு சரக்கு கப்பல் போர் நடக்கும் இடத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.
அந்தக் கப்பலில் இந்திய மாலுமிகள் 13 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எந்த நேரம் எந்த ட்ரோன் அல்லது ஏவுகனை தாக்குமோ என்ற அச்சத்தில் செய்வதறியாது கப்பலில் இருக்கின்றனர்.

கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்திற்கு அருகே இக்கப்பல் நிற்கிறது. ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகள் உட்பட15 பேர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்ற்னர்.
இது குறித்து இந்திய மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், “‘கருங்கடல் துறைமுகப் பகுதிக்கு அருகே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மோதல்கள் தொடர்வதால், கப்பலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் மிகவும் மோசமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருக்கின்றனர்.
அவர்கள் எந்த நேரத்திலும் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற தொடர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கப்பலுக்கு மிக அருகில் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எந்த நேரத்திலும் கப்பல் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே பணியாளர்கள் உள்ளனர். அத்துடன், பணியாளர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யவும், அவர்களை விரைவாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யவும் மத்திய அரசும் கப்பல் உரிமையாளர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மோதல் நடக்கும் இடங்களில் இந்தியக் கடல் பணியாளர்கள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக மாறிவிடக்கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுங்கள்,” என்றும் அதில் தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டும் வகையில், கப்பலைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்த்தியான புகை மண்டலம் எழுவதைக் காட்டும் காணொளி ஒன்றை மாலுமிகள் சங்கமும் வெளியிட்டது. இக்காணொளி அக்கப்பலிலிருந்தே பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.