
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடியிடன் பேச அண்ணாமலை அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும், அவரை சந்தித்த பிறகு அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுகிறாரா இல்லையா என்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இத்தகையச் சூழலில், அண்மையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, ”புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை இதுவரை யாரிடமும் பேசவில்லை. நாங்களும் இது குறித்து அவரிடம் பேசவில்லை. பொதுவாக எப்போதும் போல கட்சி ரீதியாக நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். சிறிய விஷயத்தைக்கூட பெரிய விஷயமாகக் காட்டுவது நமது ஊடகங்கள்தான்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளாரா என்று நயினாரிடம் கேட்டபோது, “மாநிலத் தலைவர் என்ற முறையில் இதுவரை என்னிடம் எந்த கடிதமும் வரவில்லை. ராஜினாமா தொடர்பாக இதுவரை அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. கட்சி விவகாரம், குடும்ப விவகாரம் குறித்து நாங்கள் பேசிக்கொள்கிறோம். தேர்தலின்போதுகூட அண்ணாமலை தனி ஹெலிகாப்டரில் எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். எனவே, எங்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை” என கூறினார்.