புதுப்பிக்கப்பட்ட கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரையே மிரட்டக்கூடிய அளவிற்கு ஒருவருக்கு துணிச்சல் இருக்கிறது என்றால், சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்று பார்க்க வேண்டும். இப்படி இருக்கும்போது சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? தமிழ்நாட்டில் மின் வெட்டு காரணமாக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மின்சாரத் துறை அமைச்சர் மின் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளை அழைத்து முழுமையான ஆய்வுக் கூட்டத்தை மேற்கொள்ளவில்லை. டெண்டர்களை பொறுத்தவரை அதிகாரிகள் குழுவினர்தான் இறுதி செய்வார்கள். அதில் எந்த தவறும் செய்ய முடியாது.
துறை சார்ந்த அமைச்சர்கள் அந்த துறை சார்ந்து முழுமையாக ஆராயாமல் அரைகுறைதனமாக நிர்வாகம் நடத்துகின்றனர். அவர்களிடம் சுத்தமாக நிர்வாகத் தன்மை இல்லை. மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ தவறுகள் நடந்ததைப் போல தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஹார்ட் டிஸ்க் தொலைந்த விவகாரத்தில் தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. முதலில் மின் வெட்டை சீரமையுங்கள், பிறகு துறையை சீரமைக்கலாம். துறைகள் எல்லாம் சீராக தான் உள்ளது.

அரசு மாறலாம், அதிகாரிகள் மாற மாட்டார்கள். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதே மின்வாரிய அதிகாரிகள்தான் பணிபுரிவார்கள். ஒரு சதவீத கருப்பு ஆடுகள் இருந்தால், மீதமுள்ள 99 சதவீதம் பேரை கொண்டு அவர்களை கண்டுபிடிக்கலாம் அல்லவா? இது ஆடவே தெரியாதவர்கள் வீதி கோணல் என்பார்களாம் என்பதுபோல உள்ளது. துறை சார்ந்த புரிதலும் இல்லை, புரிந்து கொள்வதற்கான தகுதியும் இல்லை. அதற்கு பதிலாக தவறு நடந்ததை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள், அந்த முயற்சி ஒருபோதும் எடுபடாது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கேட்கலாம், ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு கால அவகாசம் கேட்க முடியாது. இந்த அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் நன்மதிப்பை இழந்துள்ளது. ரீல்ஸ் மூலமாக வந்த த.வெ.க ஆட்சி, அதே முயற்சியை தான் மீண்டும் எடுக்கிறார்கள். இந்த ஆட்சி ரியல் ஆட்சி இல்லை, ரீல்ஸ் ஆட்சிதான் என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். தி.மு.க-வை அழிக்க, ஒழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து, ஒழிந்து போயிருக்கிறார்கள். தி.மு.க என்பது ஒரு ஆலமரம். எங்களை தாண்டி கோடிக்கணக்கான இளைஞர்கள் பணி செய்ய தயாராக இருக்கிறார்கள். தி.மு.க-வை பற்றி பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால், தி.மு.க-வை விமர்ச்சிக்கிறார்கள்.