ராஜினாமா செய்யும் அதிமுக MLA-க்களை தவெக-வில் சேர்க்க எதிர்ப்பு; காங்கிரஸ் பெண் நிர்வாகி பதவி விலகலா?

Spread the love

கோவையைச் சேர்ந்த ஸ்ரீ நிதி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தேசிய செயலாளராக உள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

இந்த நிலையில் அ.தி.மு.க-வின் எஸ்.பி. வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர், ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்ததை ஸ்ரீ நிதி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சனம் செய்திருந்தார்.

அதில், “காங்கிரஸ், த.வெ.க-க்குப் பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்ற நிபந்தனை வைத்திருந்தது. அந்த நிலையில் என்.டி.ஏ. ஆதரவுடன் வென்ற 3 எம்.எல்.ஏ-க்களை இணைத்திருப்பதற்கான காரணம் என்ன? இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தலைமை கவனத்திற்கு வைக்கிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.

ஸ்ரீ நிதி
ஸ்ரீ நிதி

இதற்கு த.வெ.க. மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் வந்தன. இதற்கு, “காங்கிரஸுக்கு ஒவ்வாத என்.டி.ஏ. கூட்டணியின் முன்னாள் எம்.எல்.ஏ-க்களை ஏற்கக்கூடாது என்று சொன்னது குற்றமா?” என ஸ்ரீ நிதி கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீ நிதியின் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்து ஸ்ரீ நிதியிடம் கேட்டபோது, “தலைமை செயலகத்தை கட்சி ஆபிஸ் போல த.வெ.க-வினர் நடத்துகிறார்கள். நான் பதிவு பண்ணிய அதே கருத்தைத்தான் ஜோதிமணி எம்.பி-யும் பதிவு செய்தார். அ.தி.மு.க-வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது எனப் பல காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

அவர்கள் பேசும்போது பிரச்னை இல்லை. நான் பேசுவது மட்டும் பிரச்னையா? த.வெ.க-வில் இணையும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எங்களைத் தோற்கடித்து வென்றவர்கள் தானே? ஜனநாயக முறைப்படி தேசிய செயலாளராக என் கருத்தைப் பதிவு செய்தேன். ஆனால் இதை நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் என என்னை விமர்சனம் செய்கிறார்கள்.

ஸ்ரீ நிதி
ஸ்ரீ நிதி

நான் ஆ.ராசாவின் கருத்து தவறு என்றும் பதிவிட்டேன். தி.மு.க-விற்கு எங்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமோ, அங்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக எங்கும் சொல்லவில்லை. சிலர் இதைப் பரப்புவதற்கு என்ன காரணம்? நான் கட்சியில் தொடர்வேனா, அல்லது ராஜினாமா செய்வேனா என்பதை நான்தான் சொல்ல வேண்டும்.

கட்சியில் தொடர்வதும், இன்னொரு கட்சியில் சேர்வதும் என் தனிப்பட்ட உரிமை. இந்தப் பதிவிற்காக கட்சியில் இருந்து என்னை நீக்கினால், அது எனக்கு அவமரியாதை. நானே கட்சியில் இருந்து விலக வேண்டும் என நெருக்கடி தருகிறார்கள். என் நிலைப்பாடு குறித்து இன்று மாலைக்குள் முடிவு செய்வேன். ஆனால் ஜனநாயக ரீதியாக கேள்வி எழுப்பியதற்கு எதற்கு இவ்வளவு எதிர்வினை ஏன் எழ வேண்டும்?” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *