ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்: மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனத்தில் LIC முதலீடு – பின்னணி என்ன?

Spread the love

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்… கடந்த சில வாரங்களாக இந்தப் பங்கு நிறுவனத்தின் பெயர் பங்குச் சந்தையில் தினமும் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இந்த நிறுவனப் பங்கின் விலை தினமும் 5% முதல் 10% இறங்கி, லோயர் சர்க்கியூட்டில் வர்த்தகமாகி வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2023 ஜனவரியில் இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.946. ஆனால், இன்று இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.93 ரூபாய். இந்த நிறுவனப் பங்கினை 2023 ஜனவரியில் உச்சவிலையில் வாங்கி இருந்தால், இன்று ஏறக்குறைய 90% அளவுக்கு நஷ்டம் அடைந்திருப்பார்.

அதாவது, மூன்று ஆண்டுகளுக்கு முன் ரூ.1 லட்சத்தை இந்தப் பங்கில் முதலீடு செய்திருந்தால், அவர் 90 ஆயிரத்தை நஷ்டம் அடைந்திருப்பார்.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை ராஜேஷ் மேத்தா என்பவர் புரமோட்டர் தலைவராக இருக்கிறார். இந்த நிறுவனத்துக்கு வரவேண்டிய பணம் இரண்டு ஆண்டுகளாக வராமல் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டு 2024 மார்ச் மாதம் செபியிடம் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் குறித்து செபி விசாரிக்க ஆரம்பித்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் வரையிலான காலத்தில் இந்த நிறுவனத்தின் வருமானம் மிகைப்படுத்தி சொல்லப்பட்டு இருப்பதாக செபியின் விசாரணையில் தெரியவந்தது.

நிறுவனம் உள்ளபடி செய்த பிசினஸுக்கும் கணக்கில் காட்டி இருப்பதற்கும் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக சொல்லும் செபி, கிட்டத்தட்ட 15.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகைப்படுத்தி கணக்கு காட்டப்பட்டு இருப்பதாகச் சொல்கிறது.

இந்த நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியபோது இந்த நிறுவனத்திடம் இருந்து உரிய ஆவணங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை. ஆப்பிரிக்க நிறுவனம் ஒன்றுடன் ரூ.1000 கோடிக்கு மேல் நடந்த வர்த்தகம் குறித்த ஆவணங்களை செபிக்கு இந்த நிறுவனம் தரவில்லை.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் செய்த பிசினஸ் ஒன்றை முழுவதுமாக மறுத்திருக்கிறது இன்னொரு நிறுவனம். தவிர, இந்த நிறுவனத்தின் நிறுவனர் யூகவணிகத்தில் ஈடுபட்டதைப் பற்றியும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

இந்த நிறுவனம் மீது செபி பல குற்றச்சாட்டுகளை எழுப்பி இருந்தாலும், எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறது அந்நிறுவனம். தனது நிறுவனம் தொடர்பான ஆவணங்களைத் தரத் தயாராகி வருவதாக சொல்கிறது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்.

எல்.ஐ.சி

இந்த நிறுவனப் பங்கு விலை ஏறக்குறைய 90% குறைந்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி நிறுவனம் செய்திருக்கும் முதலீடு குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 10.8% பங்கினை எல்.ஐ.சி நிறுவனம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த முதலீட்டின் மதிப்பு ரூ.3,000 கோடிக்கு மேல் என்று தெரியவந்துள்ளது. இது பங்குச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் செய்திருக்கும் மொத்த முதலீட்டில் மிக மிகக் குறைந்த அளவாகத்தான் இருக்கும். இதனால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு மிகப் பெரிய நஷ்டம் எதுவும் வந்துவிடப் போவதில்லை என்றாலும், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல விதமான குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ஒரு நிறுவனத்தில் எல்.ஐ.சி நிறுவனம் தொடர்ந்து இத்தனை ஆயிரம் கோடிகளை வைத்திருப்பது ஏன் என்கிற கேள்வியை முதலீட்டாளர்கள் எழுப்பவே செய்கின்றனர்.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் எந்தத் தவறும் இல்லையா, இந்த நிறுவனம் பற்றி செபி சொல்வது சரியில்லையா, செபியின் குற்றச்சாட்டுக்கு எல்.ஐ.சி நிறுவனம் சொல்லும் பதில் என்ன எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் முதலீட்டாளர்.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பற்றி செபி மட்டும் கேள்வி எழுப்பவில்லை; இந்த நிறுவனத்துக்கு கனரா வங்கி தந்த கடனும் வாராக் கடனாக மாறியிருப்பதையும் இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் கவனிக்கத் தவறக்கூடாது. கனரா வங்கி இந்த நிறுவனத்துக்குத் தந்த ரூ.2,458 கோடி கடனாக அளித்திருப்பதாகவும், இதில் ரூ.500 கோடி மதிப்புள்ள கடனை வேறொரு நிறுவனத்துக்கு விற்கலாமா என கனரா வங்கி பரீசிலித்து வருவதாகவும் வெளியாகி இருக்கும் செய்தி இந்த நிறுவனப் பங்கில் முதலீட்டாளர்களை மேலும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.

பங்கு முதலீடு

இந்த நிறுவனப் பங்கில் இந்திய சிறு முதலீட்டாளர்கள் பலரும் முதலீடு செய்துவைத்திருக்கின்றனர். இந்த நிறுவனப் பங்கு 1996-ஆம் ஆண்டில் முதல் வர்த்தகமாகி வருகிறது என்றாலும், 2014-ஆம் ஆண்டுக்குப்பிறகு விலை அபரிமிதமாக உயரத் தொடங்கியது. இந்த விலையேற்றத்தைப் பார்த்து சிறுமுதலீட்டாளர்களும் எஃப்.ஐ.ஐ.களும் பெருமளவில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். இந்த நிறுவனப் பங்கில் சிறுமுதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 20.4% அளவுக்கு முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.

எஃப்.ஐ.ஐ.கள் எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 14.3% அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனப் பங்கின் விலை தொடர்ந்து இறங்கிவரும் நிலையில், சிறுமுதலீட்டாளர்களோ அல்லது எஃப்.ஐ.ஐ.களோ ஏன் இந்தப் பங்கை விற்றுவிட்டு, வெளியேறவில்லை என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்வதை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தவிர்த்து வந்துள்ளன என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்த விஷயம்.

ஆக, பங்குச் சந்தை அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு, சரியான நிர்வாகச் செயல்பாடுகள் இல்லாத நிறுவனங்களில் பணம் போட்டு, பெருமளவில் நஷ்டப்படுவதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்து, நீண்ட காலத்தில் ஓரளவு லாபம் பார்ப்பதுதான் சரியான விஷயமாகப்படுகிறது இல்லையா?

labham
labham

மியூச்சுவல்  ஃபண்ட்   முதலீட்டு   ஆலோசனை   வேண்டுமா?

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *