
அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் தற்போது காலியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிக்கத் தவெகவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இந்த ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்குத் தகுதியான வேட்பாளரைத் தவெக தலைமை தீவிரமாகத் தேடி வருகிறது. இதற்கிடையே, நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பெயர் தவெக தரப்பில் பலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மறுபுறம், இந்த மாநிலங்களவை சீட்டைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தவெகவுக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைவதற்குக் தொடக்கத்திலிருந்தே தீவிரமாகச் செயல்பட்டுவந்த, ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்திக்கு இந்த எம்பி பதவியைக் கேட்டு காங்கிரஸ் தலைமை அடம் பிடித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தவெகவில் ராஜ்யசபா எம்பி பதவியை பிடிக்க விஜய் மேலாளர் ஜெகதீஷ் ஜெகதீஷ் பழனிசாமி, ஜான் ஆரோக்கியசாமி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே தனக்குக் கிடைத்த இந்த முதல் டெல்லி வாய்ப்பைத் தவெக தன் வசமே தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது தனக்கு ஆதரவளித்த காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்குமா என்ற விவாதம் தற்போது பலமாக எழுந்துள்ளது.