ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த புங்கனூர் ஊராட்சி வெள்ளங்குளம் கிராமத்திலுள்ள வரதேசி மலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விறகுகளை சேகரிப்பதற்காக மலைப் பகுதியில் ஏறினார். அப்போது, மண்ணில் துளைத்திருந்த நிலையில், இரும்பினாலான ஒரு மர்ம பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி, கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் வெங்கடேசன் தகவல் தெரிவித்தார். முன்னாள் ராணுவ வீரரும் மலைப் பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, அது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் `மோட்டார் வகை வெடிகுண்டு’ எனத் தெரியவந்தது.

உடனடியாக, திமிரி காவல் நிலையப் போலீஸாரிடம் தெரியப்படுத்தினர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அங்குசென்று ஆய்வு செய்தனர்.
சுற்று பரப்பில், வெடித்த நிலையில் ஒரு குண்டும், வெடிக்காத நிலையில் மண்ணில் துளைத்திருந்த ஒரு குண்டும் இருப்பதை கண்டறிந்தனர். அதனருகில், மக்கள் யாரும் செல்லாத வகையில் குண்டைச் சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.