ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூலை 1-ம் தேதி முகாம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் கோமாரி நோய் மிகவும் முதன்மையானது. இதனால், கால்நடைகள் இழப்பு மற்றும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குஉட்பட்ட கன்றுகளில் இறப்பு ஏற்படும். பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.