பாக்யராஜ் கதை, திரைக்கதை எழுத, எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் 1988-ல் வெளிவந்தது “இது நம்ம ஆளு’ திரைப்படம். இத்திரைப்படத்திற்கு முன்பு வரை எம்.எஸ்.வி, சங்கர் – கணேஷ், இளையராஜா, கங்கை அமரன் ஆகிய இசையமைப்பாளர்களுடன் பாக்யராஜ் இணைந்து பணியாற்றி வந்தார்.
‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் பாக்யராஜ். இளையராஜாவுக்கும் அவருக்கும் ஒரு முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், இசையைக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என யோசித்திருக்கிறார் பாக்யராஜ்.
பிறகு, பாக்யராஜின் நாடகங்களுக்கு இசையமைத்தவர் மூலம் இசையைப் பின்னர் கற்றுக்கொண்டிருக்கிறார். அதில் நம்பிக்கை கிடைத்ததும்தான் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் பாக்யராஜ். இதனைப் பாக்யராஜே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
‘இது நம்ம ஆளு’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆளான தாமரை’, ‘அம்மாடி இதுதான் காதலா’ ஆகிய பாடல்கள் பெரியளவில் ஹிட் ஆயின. இந்தப் படத்திற்குப் பிறகு அவரின் ‘ஆராரோ ஆரிராரோ’, ‘பவுனு பவுனுதான்’, ‘ஞானப்பழம்’ ஆகிய படங்களுக்கு அவரே இசையமைத்தார்.