“ராமர் கோயில் கட்ட வெளிநாட்டு பணம் வந்தது.. இப்போது மட்டும் என்ன தவறு?” – ப.சிதம்பரம் கேள்வி! | If Foreign Funds Were Accepted for Ram Temple, What’s Wrong With Aid to Muslim & Christian?: P Chidambaram

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

மதுரை: “அந்நிய நிதி உதவி ஒழுங்குமுறை சட்டம் என்ற சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அச்சட்டம் 1976-லிருந்து நடைமுறையில் இருக்கிறது. அந்த சட்டத்தின்படிதான் உலகம் முழுவதுமிருந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பணம் வந்தது. ராமர் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் தரும்போது, இங்கேயுள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் பணம் தருவதில் என்ன தவறு?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நடந்தது என்ன என்ற கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி கே.நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

If Foreign Funds Were Accepted for Ram Temple What s Wrong With Aid to Muslim amp amp Christian P Chidambaram

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், “மத்திய பாஜக அரசு விவாதமின்றி மசோதாவை நிறைவேற்றுகிறது. அதில் பொதுத்தேர்வுகள் நியாயமற்ற செயல்கள் தடுப்பு சட்டம் என்ற ஒரு மசோதா கொண்டு வந்துள்ளனர். குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இச்சட்டம் நிறைவேற்றிய பிறகு நாள்தோறும் பொதுத்தேர்வுகள் ரத்தாகின்றன. ஆக இது மாதிரி பயனற்ற சட்டங்களை விவாதமின்றி நிறைவேற்றிவிட்டு நாங்கள் பல மசோதாக்களை நிறைவேற்றினோம் என பீற்றிக் கொள்கின்றனர்.

‘வந்தே மாதரம்’ பாடலை அவமரியாதை செய்தால் தண்டனை என்ற சட்டம் கொண்டுவந்துள்ளனர். 1947-க்கு முன்பு வந்தே மாதரம் என்றால் பாஜகவுக்கும், அவர்களின் முன்னோடிகளுக்கும் தெரியாது. இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், ஜனசங்கம் ஆகியவை வந்தேமாதரம் பாடியது கிடையாது. மூவர்ணக் கொடியை நாக்பூரில் ஏற்றியது கிடையாது. 12 ஆண்டுகளாகத்தான் ஏற்றுகின்றனர். வந்தே மாதரத்துக்கு என ஒரு வரலாறு இருக்கிறது. வரலாறு தெரியாதவர்கள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவோம் என அச்சுறுத்தினர், மிரட்டினர். இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. 1971-க்கு முன்பு தமிழகத்தில் 41 எம்.பிக்கள் இருந்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1971-க்கு பின்பு 39 எம்.பி தொகுதிகளாக அது குறைந்தது. பிறப்பு விகிதம் குறைந்ததால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது, தேசம் பிளவு படக்கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கருதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி 1976-ல் பிரதிநிதித்துவம் 25 ஆண்டுகள் தொடரும். இதே நிலை இருக்கும் என சட்டம் கொண்டு வந்தார்.

அது 2001-ல் முடிந்தது. அதற்குப்பின் வந்த பிரதமர் வாஜ்பாய், பாஜக என்றாலும் அந்த கட்சியில் வித்தியாசமானவர். தென் மாநிலங்கள் பாதிக்கக்கூடாது எனக் கருதி இன்னும் 25 ஆண்டுகள் நீட்டித்தார். அது 2026-ல் முடியும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதுதான் சரியான நேரம், வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று கருதி பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தொகுதி மறுவரையை கொண்டு வர பார்க்கின்றனர். இதனை எதிர்த்தோம்.

இந்த விஷயத்தில் திமுக ஒரு வாரம் தடுமாறியது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய், எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் திமுக கலந்து கொள்ளாதது வருத்தமாக இருந்தது. நல்லவேளை சில நாட்களுக்கு பின்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திமுக ஆதரித்ததற்கு மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

இன்றைய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் தொடர வேண்டும என வலிமையான அணி உருவாகியிருக்கிறது. ஆளும் கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லிக் ஒரு அணியில் இருக்கின்றனர். அதில் மாறுபாடு கிடையாது. இந்த மசோதா மீண்டும் வந்தால் ஒற்றுமையாக இருந்து மீண்டும் தோற்கடிப்போம்.

இதில் அதிமுக மட்டும் அபசுரமாக ஒலித்தது. அது கரையும் கட்சி. அதனால் ஒலித்தால் ஒன்றும் பயன் கிடையாது. மக்களவையில் அவர்களுக்கு உறுப்பினரே கிடையாது. மாநிலங்களவையில் 2, 3 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினரே இல்லாதவர்கள் நம்மோடு சேர்ந்து பாடினால் என்ன.. எதிர்த்து பாடினால் என்ன, அதில் அர்த்தம் கிடையாது. தாங்கள் கரைகிற கட்சி என அவர்களுக்கே தெரியவில்லை. மோடி, அமித் ஷா ஆகியோருக்கு உறுதி அளித்துவிட்டனர். ஆகவே நாங்கள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என அக்கட்சி தலைவர்கள் பேசுகின்றனர். அதில் அர்த்தமில்லை.

இன்னொன்று அந்நிய நிதி உதவி ஒழுங்குமுறை சட்டம் என்ற சட்டத்தை கொண்டுவந்துள்ளது பாஜக அரசு. அச்சட்டம் 1976-லிருந்து நடைமுறையில் இருக்கிறது. அந்த சட்டத்தின்படிதான் உலகம் முழுவதுமிருந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பணம் வந்தது. ராமர் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் தரும்போது, இங்கேயுள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் பணம் தருவதில் என்ன தவறு? இதுபோன்று மக்கள் விரோத மசோதாக்களை ஒற்றுமையாக இருந்து தோற்கடிப்போம்” என்று பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *