International
-Nantha Kumar R
டாக்கா: வங்கதேசத்தில் 81 அடி உயரமுள்ள ராமர் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய அமைப்புகளின் அச்சுறுத்தல்களை தொடர்ந்து 81 அடி உயரமுள்ள ராமர் சிலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்துக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்டை நாடான வங்கதேசம் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். வங்கதேசத்தில் வெடித்த வன்முறையை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து ஒன்றரை ஆண்டுகள் இடைக்கால அரசு நடந்தது. முகமது யூனுஸ் தலைமையிலான இந்த அரசு நடந்தபோது இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்துக்கள் அடித்து கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடந்தை தொடர்ந்து இடைக்கால அரசு முடிவுக்கு வந்தது. பொதுத்தேர்தலில் பிஎன்பி கட்சி வென்றது. மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக செயல்பட்டு வருகிறார். தற்போது இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறைந்தது. இதனால் இந்துக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ராமர் சிலை அமைக்க இஸ்லாமிய அமைப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டத்தில் பலாஷ்பாரி என்ற இடம் உள்ளது. அங்கு கோவில் வளாகத்தில் 81 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.இந்திய மதிப்பில் ரூ.15.6 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் குழுவின் தலைவர் ஹரிதாஸ் சந்திர தாஸ் மேற்பார்வையில் பணி நடந்து வருகிறது.
தற்போது ராமர் சிலை கட்டுமான பணி ஏற்கனவே 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தான் ராமர் சிலை கட்டுமானத்துக்கு இஸ்லாமிய அமைப்பினருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராமர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய மதப்பிரசாகர்கள் இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தொடர் அழுத்தம் காரணமாக தற்போது ராமர் சிலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிறுத்தப்பட்ட ராமர் சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். டாக்கா பல்கலைக்கழக இந்து மாணவர்கள் ஷாபாக் பகுதியில் போராட்டத்தை மேற்கொண்டனர். மேலும் வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் தலையீடு செய்து ராமர் சிலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுபற்றி கோவில் குழுவின் ஆலோசகர் ஷியாம்லால் குமார் மஹந்தா கூறுகையில், ”சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை காக்க இப்பணியை நிறுத்தி உள்ளோம். யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் வங்கதேசத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் மதத்தை பின்பற்ற முழு உரிமை உண்டு. மீண்டும் பணி தொடங்கும் என்று நம்புகிறோம்” என்றார்.