ரீல்ஸா? ரியாலிட்டியா? ஸ்டாலினுடன் மோதும் தவெக ஐடி விங்..! – Kumudam

Spread the love

போதைப் பொருள் தடுப்பு நாள்(ஜூன் 26) அன்று தவெக அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற மாரத்தான் ஒருபக்கம் நடக்க, மறுபக்கம் தவெக அமைச்சர் சரத் போதைப் பொருளை பயன்படுத்தியதாகக் கூறி ஒரு பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. போதைப் பொருள் பயன்படுத்தும் நபரை அமைச்சரவையில் வைத்துள்ளார் முதலமைச்சர், இவர் எப்படி போதைப் பொருளை தடுப்பார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் சரத் தான் பவுடராக்கிக் கொண்டிருந்தது குழந்தைக்கான மாத்திரை தான் என்று தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

அமைச்சரின் இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றும், மாத்திரை பயன்படுத்துபவர் டெபிட் கார்ட்டை வைத்துதான் நசுக்குவாரா? பக்கத்தில் இருந்து 500 ரூபா நோட்டு எதற்கு? வீடியோவில் குழந்தையே இல்லை, ஆனா குழந்தையை வைத்து பொய் சொல்கிறாரே என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமைச்சரையும் தவெக அரசையும் அட்டாக் செய்து வந்தனர்.

இந்த நிலையில், திமுக தரப்பில் அமைச்சர் சரத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடும் முழுவதும் ஆர்ப்பட்டம் செய்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைக் கண்டித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைத்தளத்தில், “போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு! இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது! அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்” என்று பதிவிட்டு இருந்தார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தவெக ஐடி விங் ஒரு பதிவை போட்டுள்ளது. 

அதில், ”’போதைப் பொருள் பயன்படுத்தியது போல்’ என்றால் என்ன ‘போல்’ தி.மு.க. தலைவர் அவர்களே?.அப்படியெனில் அது பொய்யென்று நீங்களும் சொல்ல வருகிறீர்கள்தானே ‘போல்’ கொளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. அவர்களே?.‘விமர்சித்ததால் கைதா?.’ வேடிக்கையாகப் பேசுவதில் நீங்கள் வல்லவர்தான் ஸ்டாலின் சார். செய்த வினைகளால் சிக்கி வரும் உங்கள் அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரையும் விமர்சன வல்லுநர் ‘போல்’ ஆக்குவதில் ஆகச்சிறந்த ‘போல்’ அரசியல்வாதி நீங்கள்தான் ஸ்டாலின் சார். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதில் வல்லவர் நீங்கள்தான். எதிர்க்கட்சிகளை மட்டுமா?.கூட்டணிக் கட்சிகளையும் கொடியேற்றக்கூட விடாமல் நீங்கள் செய்ததெல்லாம் ‘போல்’ நல்ல அரசியலா ஸ்டாலின் சார்?. எல்லோருக்கும் S.O.P என்றிருந்தபோது எங்கள் வெற்றித் தலைவருக்கு மட்டும் Stalin sir Operating Procedure போட்டவர்தானே நீங்கள் சார்?. ஜனநாயக உரிமையான விமர்சனங்களை வரவேற்பவரே எங்கள் வெற்றித் தலைவர். 
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லாட்சியான மனசாட்சி உள்ள மக்களாட்சியைத் தரும் எங்கள் வெற்றித் தலைவர் அவர்கள், உங்களைப் போல ‘போல்’ தலைவராக ஒருநாளும் இருக்க மாட்டார் என்பது மக்களுக்கே நன்கு தெரியும்.

இடைத்தேர்தலுக்காக மீண்டும் நல்லோர் வேடம் பூணத்துடிக்கும் உங்களின் ‘போல்’ அரசியலான போலி அரசியல் முகமூடி எல்லாம் விரைவிலேயே கழன்று விழத்தான் போகிறது. முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்ட தி.மு.க விற்கு டேக் டைவர்ஷனுக்கு இனி வழியே இல்லை என்பது தெரிந்தும் டேக் ஆஃப் ஆகாத உங்கள் அரசியலைக் கண்டு நீங்களே ஃபீல் செய்து ரீல்ஸ் போட்டு மகிழும் நாள் வெகுதொலைவில் இல்லை. கோட்டையிலேயே  ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?. உங்களுக்குத் தெரியாத ரீல்ஸா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடும் ‘போல்’ தி.மு.க. தலைவர் அவர்களே” என்று தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *