சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை’- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

Spread the love

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட சிறுமி விடுமுறைக்காக ​​தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். அச்சிறுமியை, குற்றம் சாட்டப்பட்ட பீமாராவ் காம்ப்ளே (65) என்ற முதியவர், சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு வரவழைத்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.

சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். பின்னர் அவரின் உடல் அந்த மாட்டுத் தொழுவத்தில் இருந்த மாட்டுச் சாணத்தில் புதைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பீமாராவ் அதே நாளில் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நஸ்ராபூரில் உள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். புனேவின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்த 16 நாள்களுக்குள் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிமன்றம் மே 28 அன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர் மீது கருணை காட்டும்படியும், ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த 20ம் தேதி அன்று இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.

கடந்த 25ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் அதிக அளவில் மக்கள் கூடியிருந்தனர். குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி சாலுங்கே, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கேட்டு கோர்ட்டில் கூறி இருந்த மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சம்பவம் நடந்து 60 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *