இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.
2022 ஜனவரி முதல் 2026 மே வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான படுக்கை விரிப்பு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இரயில்வேயின் மொத்தம் உள்ள 69 கோட்டங்களில் 54 கோட்டங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திருடப்பட்ட இந்தப் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.104 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தத் திருட்டுகள் 56 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத், ராஞ்சி, பிகானெர், ஜெய்ப்பூர், பிலாஸ்பூர் உள்ளிட்ட 10 முக்கிய ரயில்வே கோட்டங்களிலேயே ஒட்டுமொத்த திருட்டுச் சம்பவங்களில் 67 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் உரியது அல்லாமல், நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பரவலாக நடக்கும் ஒரு தேசிய அளவிலான சவாலாக உருவெடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.