“லண்டன் ஷூட்டிங்கை திசைதிருப்ப ரெய்டை ஏவிய தவெக..” – ஸ்டாலின் தாக்கு! – Kumudam

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், திமுக நிர்வாகி பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீட்டில் இன்று CCB போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 6 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரெய்டுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், அவற்றை கண்டுகொள்ளாமல் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் எதிர்க்கட்சியினரை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்… பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்…நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்… ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு… இராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு.

இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்” என்று பதிவிட்டுள்ளார் ஸ்டாலின். 

இதனிடையே, அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை நடைபெறும் தகவல் அறிந்து திமுக தொண்டர்கள் அங்கு திரண்டதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *