கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில், ரமேஷ் சென்னித்தலாவுடன் இருக்கும் புகைப்படங்களை அங்குள்ள வெளிநாடு வாழ் கேரளத்தவர்களும், கேரள எம்.எல்.ஏ அன்வர் சாதத் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் சென்னித்தலாவின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பினர். அரசியல் ரீதியாக விமர்சனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஃபேஸ்புக் வீடியோ மூலம் ரமேஷ் சென்னித்தலா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
ஃபேஸ்புக் வீடியோவில் அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், “அன்பானவர்களே, நான் இப்போது சிகாகோவில் இருக்கிறேன். ஜெய்ஹிந்த் தொலைக்காட்சியின் தொடக்கக் காலத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த பெலிக்ஸ் சைமனின் மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நானும் எனது மனைவியும் இங்கு வந்துள்ளோம். நான் கோட்டயம் எம்.பி-யாக இருந்த காலம் முதலே, அதாவது சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடன் எனக்கு நெருங்கிய குடும்ப நட்பு உண்டு. அவரது மகன் திருமணத்திற்காக இங்கு வந்தபோது, இயல்பாகவே இங்குள்ள வெளிநாடு வாழ் கேரள நண்பர்களுடன் உரையாடவும், அவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

“இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்’ நிகழ்வு, அவர்களின் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் சிகாகோ சோஷியல் கிளப் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இதற்கிடையேதான் உலகப் புகழ்பெற்றவரும், இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்டவருமான சாம் பித்ரோதாவின் இல்லத்திற்குச் சென்றேன். என்னுடன் மோன்ஸ் ஜோசப், ஜோஸ் கே. மாணி, பந்தளம் சுதாகரன், அன்வர் சாதத் ஆகியோரும் உடன் இருந்தனர்.