வாழ்வில் பிரச்னைகள் தீர, வேண்டும் வரம் கிடைக்க, ஆனந்த வாழ்வு மலர இறைவழிபாடு அவசியம். அப்படி இறைவனை வழிபடும் முறைகளில் முக்கியமான ஒன்று ஹோமங்கள். தனிப்பட்ட நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஹோமங்கள் கைமேல் பலன் கொடுப்பவை. தேவர்களும் ரிஷிகளும் அசுரர்களும் ஹோமங்களும் பிரம்மாண்ட யாகங்களும் செய்து ஒரு குறிப்பிட்ட தேவதையை வழிபட்டு விரும்பும் சக்தியைப் பெற்றனர் எனப் புராணங்கள் தோறும் உதாரணங்கள் உள்ளன.
இன்றும் சத்ரு சம்ஹார ஹோமம், காரிய ஸித்தி ஹோமம் என முக்கியப் பிரமுகர்கள் பலரும் தமக்கு நன்மைகள் நடக்க யாகங்கள், ஹோமங்கள் செய்வது குறித்த செய்திகளை நாம் பார்த்துவருகிறோம்.
வீட்டில் அடிக்கடி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஸ்ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்களைச் செய்வதை இன்றும் பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அப்படிச் செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. அதேவேளையில் உக்கிரமான தெய்வங்களுக்கான சில ஹோமங்கள் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் செய்யப்பட வேண்டும் என்று உள்ளன. அதற்குக் காரணம் அது குறித்த ஏற்பாடுகளில் இருக்கும் சிரமங்களும் பொருட் செலவுகளும் தான். அப்படி ஒரு ஹோமம்தான் பிரத்யங்கிரா ஹோமம்.

நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவனார் சரபராக அவதரித்தபோது, அவருடைய இரு இறக்கைகளாக பிரத்தியங்கிராதேவியும், சூலினி துர்கையும் அவதரித்ததாகக் கூறுவர். பைரவ மூர்த்தியின் பக்தர்கள், இவளை பைரவ பத்தினியாகப் போற்றுவர். சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள் இந்த அன்னை.
ஒவ்வொன்றிலும் முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங்கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன.
மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.