மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு சுமார் ரூ. 3 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (மே 15, வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98-க்கும், டீசல் ரூ. 95.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வுடன் சேர்த்து, சர்வதேச நெருக்கடியைக் காரணம் காட்டி CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான வரி வித்தியாசத்தைப் பொறுத்து, நாட்டின் பிற நகரங்களில் இந்த விலை உயர்வு லிட்டருக்கு ரூ. 2.83 முதல் ரூ. 3.29 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.