தற்கொலை செய்த அன்று நடந்தது குறித்து த்விஷாவின் சகோதரர் ஹர்ஷித் சர்மா கூறுகையில், “‘அன்று இரவு 10.05 மணிக்கு த்விஷா சர்மா தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சமர்த் சிங் அறைக்குள் நுழைந்தார்.
உடனே த்விஷா சர்மா போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள பல முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. இது தவிர சமர்த் சிங் அல்லது அவரது தாயாரும் போனை எடுத்து பேசவில்லை. பல மணி நேரத்திற்குப் பிறகு சமர்த் சிங் தாயார் கிரிபாலா சிங் போன் மூலம் எங்கள் தாயாரிடம் த்விஷா இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி த்விஷா ஷர்மாவின் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்ட பிறகு, அவரது கணவர் சமர்த் சிங், அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் தந்தையைப் பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியது த்விஷாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலை செய்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது சமர்த் சிங் வாக்குமூலத்தில் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏழு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சமர்த் சிங், சுமார் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னதாக ஜபல்பூரில் சரணடைவதற்காகச் சென்ற அவர், அங்கு சரணடைவதற்கு முன்பே கைது செய்யப்பட்டு போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மறுநாளே இந்த விசாரணை நடைபெற்றது. சர்மா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நாளிலிருந்து சமர்த் சிங் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதற்கிடையில், அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதியான அவரது தாயார் கிரிபாலா சிங் என்பவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த போதிலும், தனது மருமகளின் மரணம் தொடர்பான விசாரணையில் போலீஸ் அறிவிப்புகளைப் புறக்கணித்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.