India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மதசார்பற்ற கொள்கை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விரைவில் ‘அசாத் ஹிந்த்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளேன் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரன் சந்திர குமார் போஸ் அறிவித்துள்ளார்.
நம் நாட்டின் சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். மகாத்மா காந்தி அகிம்சை வழியில் சுதந்திரம் பெற முயன்றபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரியமாக போராடினார். இதற்காக இந்திய தேசிய ராணுவத்தை கட்டியெழுப்பி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளுப்பேரனாக இருப்பவர் சந்திர குமார் போஸ். மேற்கு வங்கத்தில் வசித்து வருகிறார். இவர் அரசியலில் ஆர்வமாக உள்ளார். இதனால் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டில் பாஜகவி் ஐக்கியமானார். 7 ஆண்டுகளுக்கு பின் பாஜகவில் இணைந்து தவறு செய்துவிட்டதாக அவர் கூறி விலகினார்.
அதன்பிறகு சமீபத்தில் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சந்திர குமார் போஸ் அம்மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் தான் சந்திர குமார் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். சொந்த காரணங்களுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தான் சந்திர குமார் போஸ் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளாதாவது: ”இந்தியா சுதந்திரமடைந்து 80வது ஆண்டை நெருங்கும் நிலையில் இளைஞர்கள் மீண்டும் முன்னோக்கி வந்து போராட தொடங்கி உள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் (நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம்) இதனை பார்த்தேன்.
நாடு முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. கல்வி, சுகாதாரம் தொழில் என்று வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஊழல் மாறிவிட்டது. நேதாஜியின் ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் மற்றும் ஆசாத் ஹிந்த் கட்சியின் கொடியின் கீழ் போராடுவதை விட சிறந்தது வேறென்ன இருக்க முடியும்?. அசாத் ஹிந்த் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை விரைவில் தொடங்க உள்ளேன். நேதாஜியின் மதசார்பற்ற கொள்கை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கட்சி தொடங்கப்படும்.” என்றார்.