Tamilnadu
oi-Velmurugan P
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டையில் ஓய்வெடுப்பதற்காகக் காரில் ஏ.சி. போட்டுக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த, சென்னையில் பணிபுரியும் தனியார் ஓட்டல் மேலாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் முரளி (42). திருமணமான இவர், கடந்த 15 ஆண்டுகளாகத் தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், சொந்த ஊரான வாலாஜாபேட்டையில் வசித்து வரும் தன் தந்தையைப் பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது, முரளி தன்னுடைய காரில் ஏ.சி.-யை இயக்கியபடி தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் அவர் காரில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை, காரைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது முரளி எந்தவித அசைவும் இன்றி க் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முரளி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து முரளியின் மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில், வாலாஜாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஒரே இடத்தில் நிறுத்தி ஏ.சி. போட்டு தூங்கும்போது, காரின் புகைப் போக்கியில் வரும் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயு கார் கூபேக்குள் நுழைகிறது. இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது.
