வாழ்வா – சாவா போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ்: மம்தா பானர்ஜியின் அதிரடி முழக்கம்!

Spread the love

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அங்கு ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது தன் வரலாற்றிலேயே மிக மோசமான வாழ்வா-சாவா போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான உள்கட்சி பூசலில் சிக்கியுள்ளது. கட்சியில் உள்ள 80 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 50 முதல் 60 பேர் தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் கட்சி உடையும் அபாயத்தில் உள்ளது.

சமீபத்தில், எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கடிதத்தில் தங்களது கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்று இரண்டு திரிணாமுல் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தது இந்த உள்கட்சி மோதலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. மேலும், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மாறக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு மிகப்பெரிய சோதனைக் காலமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த கொல்கத்தா காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்திருந்தது.

அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் வேறொரு இடத்தில் இன்று பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “மற்ற தலைவர்கள் பயந்து ஓடினாலும், என் உயிரே போனாலும் தொண்டர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். இது நமக்கு வாழ்வா-சாவா போராட்டம். திரிணாமுல் காங்கிரஸை உடைக்க சிலர் துரோகம் செய்து வருகிறார்கள். பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் விரைவில் டெல்லியில் கூடி, அடுத்தகட்ட தேசிய அளவிலான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும். நாங்கள் மேடை அமைப்பதற்கோ அல்லது மைக்ரோஃபோன் பயன்படுத்துவதற்கோ கூட காவல்துறை அனுமதி வழங்கவில்லை. பா.ஜ.க அரசின் கீழ் எங்களுக்கு ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது.” எனக் காட்டமாகப் பேசினார்.

mamata banerjee

அரசியல் ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸ் இந்த நெருக்கடியை தைரியமாக எதிர்கொள்ள முயன்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் மம்தாவின் தீவிர ஆதரவாளர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், மதன் மித்ரா, டெரெக் ஓ பிரையன், கல்யாண் பானர்ஜி மற்றும் டோலா சென் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், சமீபத்திய தேர்தலில் திரிணாமுல் சார்பில் போட்டியிட்டு வென்ற பல புதுமுக எம்.எல்.ஏ-க்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது மம்தாவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் பெயரைக் சொல்லி வாக்குக் கேட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களே இப்போது கட்சிக்குத் துரோகம் செய்ய நினைப்பது வேதனையளிப்பதாக திரிணாமுல் தலைவர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *