தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது.
இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் த.வெ.க சிக்கலில் தவித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன.
இதனிடையே த.வெ.க தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.
பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.
இன்று கேரளா செல்லவிருந்த ஆளுநரை விஜய் மீண்டும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார்.
ஆட்சியமைத்துவிட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என த.வெ.க விஜய் தரப்பு ஆளுநரிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆளுநர் தரப்பில், `உங்களுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. பெரும்பான்மையை எப்போது நிரூபிக்க முடியும்? யார் யார் உங்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளார்கள்? நிலையான அரசாங்கத்தை வழங்கமுடியுமா? உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்பட்டது.
அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்புவிடுத்ததாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆளுநரின் இந்த இழுபறிக்கு பின்னால் பாஜக இருப்பதாக அரசியல் தலைவர்கள் பலர் விமர்சனம் செய்துவருகின்றனர். பாஜகவின் அழுத்தத்தால் தான் ஆளுநர் பதவியேற்க அனுமதி தர மறுக்கிறார் என்று கூறப்படுகிறது. திமுக உடன் கூட்டணியில் பயணிக்கும் கமல்ஹாசன், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் என பலரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
தனிப்பெரும் கட்சியாக விஜய் உருவெடுத்தபோதிலும் பதவியேற்புக்காகத் தற்போது பந்தாடப்பட்டு வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.