அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்ப மாநில அளவில் அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள் ‘இண்டி’ (I.N.D.I.A.) கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் புதியதொரு அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தவெக ஆட்சியமைக்க ஏதுவாக, திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய காங்கிரஸ், விஜய் தரப்பிற்குத் தன் ஆதரவை வழங்கி ஆட்சி கட்டிலிலும் அமர்ந்திருக்கிறது.

‘இண்டி’ கூட்டணியில் புகைச்சல்
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் தவெகவுடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
காங்கிரஸின் இந்தத் துரோகப் போக்கினால் கடுப்பான திமுக தலைமை, காங்கிரஸுடனான தங்களின் நீண்டகாலக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்ததாக அதிரடியாக அறிவித்தது.
தமிழகத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிரடி அரசியல் மாற்றம், தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட ‘இண்டி’ கூட்டணியில் மிகப்பெரிய புகைச்சலையும், பிளவையும் ஏற்படுத்தியுள்ளது.