
நீண்ட இழுபறிக்குப் பின் தமிழ்நாட்டின்முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த மே 27 – 28 தேதிகளில் டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் விஜய், தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இருவரிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், முதலமைச்சர் விஜய்யின் டெல்லி விஜயம், தமிழக அரசியலில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அஸ்திவாரம் போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டேக் ஆஃப் ஆன வேகத்திலேயே லேண்ட் ஆகிவிட்டதால் தவெக தலைமை அப்செட்டில் இருந்துவருகிறது என்கின்றார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி, காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு என முதலமைச்சர் முதல் டெல்லி விஜயம் ரத்துக்கு மேல் ரத்தாகிவிட்டது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு எதிர்பார்த்ததைவிட மிக விரைவிலேயே முடிந்துவிட்டது. சட்டுனு வந்து சட்டுனு போவது போல இந்த சந்திப்புகள் இருந்ததால், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஏமாற்றத்திலேயே முதலமைச்சர் தமிழகம் திரும்பினார் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.
இந்த நிலையில், அமித்ஷாவுடனான சந்திப்பு ரத்தானது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏன்? எதற்காக? முதலமைச்சர் விஜயை அமித்ஷா சந்திக்க மறுத்தார் என்பது குறித்து டெல்லி உயரதிகாரிகளிடம் முதல்வர் அலுவலக அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். அப்போது, ”மோடியை விஜய் சந்தித்தபோது, அவருடன் மூத்த அமைச்சர்கள் யாரும் வரவில்லை. விஜய்யின் நண்பர்கள்தான் வந்திருக்கிறார்கள்’ என்ற தகவல் அமித் ஷா கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. ‘முதல்வருடன் அரசு குழுவினர் வந்திருந்தால், அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். மாறாக நண்பர்களுடன் விஜய் வந்திருக்கிறார். அதனாலேயே பிசியான ஷெட்யூலை ஒதுக்கி வைத்துவிட்டு விஜய்யை எதற்கு சந்திக்க வேண்டும்” என்று அமித்ஷா தனது அப்பாயின்மென்டை கேன்சல் செய்துவிட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.