International
oi-Vigneshkumar
வாஷிங்டன்: அமெரிக்க அரசு சமீபத்தில் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் உருவாக்கியுள்ள மிகவும் சக்திவாய்ந்த புதிய மாடல்களான கிளாட் ஃபேபிள் 5 (Claude Fable 5) மற்றும் மைத்தோஸ் 5 (Mythos 5) ஆகியவற்றை இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும் பயன்படுத்த அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்!
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களுமே AI தொடர்பான ஆய்வுகளையே தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாம் கண்ணை மூடி திறக்கும் முன்பு ஏஐ துறையில் ஏகப்பட்ட அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே பிரபல Anthropic நிறுவனத்தின் புதிய மாடல்கள் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆந்த்ரோபிக்
கடந்த ஜூன் 12ம் தேதி அமெரிக்க அரசு ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு ஒரு அவசர உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, ‘ஃபேபிள் 5’ மற்றும் ‘மைத்தோஸ் 5’ ஆகிய இரண்டு ஏஐ மாடல்களையும் அமெரிக்க குடிமக்கள் அல்லாத எவரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இந்தத் தடை அமெரிக்காவிற்கு வெளியே இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவிற்குள் இருக்கும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கூட இந்த மாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்த்ரோபிக் நிறுவனம் இந்த இரண்டு மாடல்களையும் உலகம் முழுவதும் தற்காலிகமாக முடக்கியுள்ளது. அமெரிக்க அரசு ஏஐ தொழில்நுட்பத்தை இப்போது அணுசக்தி தொழில்நுட்பத்திற்கு இணையாகக் கருதுகிறது.
சிக்கல்கள்
அதாவது ‘ஃபேபிள் 5’ மாடலில் உள்ள பாதுகாப்பு வளையங்களை உடைத்து, அதன் மூலம் கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் உள்ள ஓட்டைகளைக் கண்டறிய முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்தத் தொழில்நுட்பம் தவறான கைகளில் கிடைத்தால், வங்கிகள், அரசு அமைப்புகள் மற்றும் மின்சார கட்டமைப்பு போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்த இதைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா நம்புகிறது.
அமேசான் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஆந்த்ரோபிக் மாடல்களைப் பயன்படுத்தி சில சாப்ட்வேர் குறைபாடுகளைக் கண்டறிய முடிந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல் அமெரிக்க வர்த்தகத் துறையிடம் பகிரப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்த்ரோபிக்
அதேநேரம் அமெரிக்க அரசின் இந்த முடிவை ஆந்த்ரோபிக் நிறுவனம் முழுமையாக ஏற்கவில்லை. அரசு காட்டும் ஆதாரங்கள் இவ்வளவு பெரிய தடைக்கு போதுமானவை அல்ல என்று சொல்லும் ஆந்த்ரோபிக், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் மிகவும் சிறியவை மற்றும் ஏற்கனவே தெரிந்தவைதான் என்றும் தற்போது சந்தையில் உள்ள மற்ற ஏஐ மாடல்களும் கூட இதே போன்ற வேலைகளைச் செய்ய முடியும் என சொல்கிறது. மேலும், இந்த மாடல்களை வெளியிடுவதற்கு முன்பு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பல வாரங்கள் சோதனை செய்ததாகவும், அப்போது எந்தப் பெரிய ஆபத்தும் கண்டறியப்படவில்லை என்றும் நிறுவனம் கூறுகிறது.
இந்தத் தடைக்கு தொழில்நுட்பக் காரணங்கள் மட்டுமின்றி, அரசியல் காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகத்திற்கும் இடையே சில மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை உளவு வேலைகளுக்கும், தானியங்கி ஆயுதத் தயாரிப்பிற்கும் பயன்படுத்த ஆந்த்ரோபிக் நிறுவனம் மறுத்துவிட்டது. இது பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. எனவே, தடைக்கு இவையும் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அமெரிக்கா
இதுவரை அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏஐ சிப்கள் மற்றும் ஹார்டுவேர் தொடர்பானதாகவே இருந்தன. ஆனால், முதல்முறையாக ஒரு சாப்ட்வேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இது ஒரு மிக பெரிய மாற்றமாகும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என்பதால் மற்ற நாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் எப்போதும் நம்பியிருக்க முடியாது என்றும் இந்தியா தனக்கென சொந்தமான ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஏஐ தொழில்நுட்பம் என்பது இனி வெறுமே சந்தை பொருள் இல்லை.. அது ஒரு நாட்டின் பாதுகாப்புச் சொத்து என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை, நாளை மற்ற ஏஐ நிறுவனங்களுக்கும் வரலாம். எனவே, இந்தியா போன்ற நாடுகள் தொழில்நுட்ப ரீதியாகவும் தன்னிறைவு அடைந்தாக வேண்டும்.

