தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை, வருவாய் ஆதாரங்கள், புதிய நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவான ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். அதன் பின்னர் இறுதி செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகத் தயாரித்து வருகின்றனர். பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.