`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' – எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

Spread the love

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் மே 13-ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்றுப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ், விஜய்யை உச்சியில் வைத்து மெச்சியதோடு, `தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற இருக்கும் விஜய், தன்னை காப்பாற்றாமல் விடுவாரா?’ என்று உருக்கமான வார்த்தைகளை உதிர்த்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அ.ம.மு.க சார்பில் 11 பேர் போட்டியிட்டதில், மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் மட்டுமே வெற்றிபெற்றார். மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்கட்சியாக வந்தபோதும், ஆட்சியமைக்க பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தேவைப்பட்டன.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் மனநிலையில் இல்லை. அதேவேளை, காமராஜ் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்து த.வெ.க முகாமில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

விஜய்
விஜய்

இந்தநிலையில், கடந்த எட்டாம் தேதி இரவு கவர்னரைச் சந்தித்த தினகரன், ”த.வெ.கவுக்கு அ.ம.மு.க ஆதரவு என ஆளுநரிடம் போலியாக கடிதம் கொடுத்திருக்கின்றனர். என்னுடைய எம்.எல்.ஏ காமராஜை காணவில்லை. அவர் விலை போயிருக்கலாம். அவரைப் போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. த.வெ.க குதிரை பேரம் நடத்துகிறது ” என கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

தொடர்ந்து, காணாமல் போனதாகச் சொன்ன காமராஜுடன் மீண்டும் ஆளுநரைச் சந்தித்தார் தினகரன். தொடர்ந்து, இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களைக் சந்தித்தனர்.

அப்போது பேசிய தினகரன், “ஆளுநரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது. எங்கள் நிர்வாகி பெயரில் போலி கடிதத்தை தவெகவினர் ஆளுநர் மாளிகை்கு அனுப்பி உள்ளனர்” என விளக்கமளித்தார். எம்.எல்.ஏ காமராஜும் ”நான் அதிமுகவையே ஆதரிக்கிறேன். கடிதத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து இல்லை” எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 12-ம் தேதி சட்டமன்றத்தில் பேசிய அதே காமராஜ், “தவெக அரசு தொடர்வதற்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகாலம் நீடிக்க வேண்டும்” எனப் பேச, உடனடியாக் அவரைக் கட்சியிலிருந்தும் நீக்கினார் தினகரன்.

தொடர்ந்து, 13-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய காமராஜ், விஜயை பாராட்டிப் பேசியதோடு, ”தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற உள்ள முதலமைச்சர், என்னை மட்டும் காப்பாற்றாமல் விட்டுவிடுவாரா?” எனப் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து விபமறிந்த வட்டாரத்தில் பேசும்போது,

“தேர்தல் முடிவுகள் வெளியாகி, த.வெ.கவுக்கு ஆட்சியமைக்க எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது என்கிற தெரிந்த உடனேயே காமராஜ் விஜயை ஆதரிக்க முடிவு செய்துவிட்டார். ஆனால், தினகரனின் முடிவு வேறு மாதிரியாக இருந்ததால், அவரிடமிருந்து விலகும் முடிவையும் எடுத்துவிட்டார்.

த.வெ.கவுக்கு தனது ஆதரவுக்கடிதத்தையும் வழங்கிவிட்டார். ஆளுநர் மாளிகையில், த.வெ.கவை ஆதரிப்பவர்களின் பட்டியலை விஜய் கொடுக்க, அதில் காமராஜின் பெயரும் இருந்தது. உனடியாக, கட்சியின் பொதுச் செயலாளர் தினரனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனேதான் அவர், ஆளுநர் மாளிகைக்கு வேகவேகமாக வந்தார்.

காமராஜைக் காணவில்லை எனவும் குதிரைபேரம் நடப்பதாகவும் பேசினார். அவரின் ஆட்கள் உடனடியாக காமராஜை தேடிப் பிடித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குக் கூட்டிவந்து, ஆதரவு கொடுக்கவில்லை எனவும் பேசச் செய்தார்.

அதுமட்டுமல்ல, காமராஜுடன் இரண்டு மாவட்டச் செயலாளர்களை அமர்த்தி, அவர் எங்கே சென்றாலும் கூடவே இருக்கும்படியும் பார்த்துக்கொண்டார். காமராஜ், சி.வி.சண்முகம் தரப்பைச் சந்தித்தபோதுகூட அவர்கள் உடனேயே இருந்தனர். ஆனால், தக்க சமயம் பார்த்து சட்டமன்றத்தில் விஜயை ஆதரித்துப் பேசிவிட்டார். தினகரன் தரப்பில் ஏதும் அச்சுறுத்தல் வந்துவிடக்கூடாது என்பதால்தான் என்ன முதல்வர் காப்பாற்றவேண்டும் என்று பேசியிருக்கிறார்” என்கிறார்கள்.

அ.ம.மு.கவில் நடக்கும் இந்த நிகழ்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பேசும்போது,

“மன்னார்குடி தொகுதி மக்கள் தி.மு.க வேட்பாளரையும் த.வெ.க வேட்பாளரையும் நிராகரித்து அ.ம.மு.க வேட்பாளரான காமராஜை தேர்வு செய்துள்ளனர். அப்படியிருக்க, அவர் த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்திருப்பதை தொகுதி மக்கள் எப்படி பார்ப்பார்கள் என தெரியவில்லை.

காமராஜ் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரேயொரு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றிருப்பதால், தன்னை கட்சியை விட்டு நீக்கினாலும் எந்தச் சிக்கலும் இல்லை என்று எண்ணியிருப்பார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் டி.டி.வி.தினகரன்

டெல்டாவில் தன் ஆதரவாளராக இருந்த ஒற்றை எம்.எல்.ஏ-வும் கைவிட்டுப் போய்விட்டாரே என்ற கடுப்பிலும் பா.ஜ.க-வின் தூண்டுதலிலும் தன்னுடைய விசுவாசியாக இருந்தவரை கட்சியை விட்டு நீக்கியதோடு அவரின்மீது விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார் தினகரன். விஜய் கொண்டுவந்திருப்பது மாற்றமல்ல, துர்நாற்றம் எனப் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டுக்கு இதுபோன்ற துர்நாற்றங்களைக் கொண்டுவந்ததில் தினகரனுக்கும் பங்கு இருக்கிறது” என்கிறார்கள்.

அ.ம.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழனிடம் இதுகுறித்துப் பேசினோம்..,

“ காமராஜ் செய்தது கட்சி விரோத நடவடிக்கை. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. த.வெ.கவுக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்றால் எங்கள் பொதுச் செயலாளரைச் சந்தித்துதான் ஆதரவு கேட்டிருக்கவேண்டும். மற்ற தலைவர்களை அப்படித்தானே சந்தித்து ஆதரவு கேட்டார்கள்.

ஒரு எம்.எல்.ஏவிடம் தன்னிச்சையாக ஆதரவு கேட்ட த.வெ.கவின் நடைமுறை தவறானது. கட்சியின் பொதுச் செயலாளர் என்கிற முறையில் தினகரன் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதற்கும் பா.ஜ.கவுக்கும் எந்த சம்மந்தமில்லை” என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *