யார் இந்த பவன் குமார் சந்தனா?
இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் பவன் குமார் சந்தனா, தனது பள்ளிப் பருவத்தில் கணித பாடத்தில் வெறும் 52 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தவர்.
ஆனால், அவரது தந்தை அவர் மீது நம்பிக்கை இழக்காமல் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் சேர்த்தார். பிறகு தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று 2007 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூரில் சேர்ந்தார் பவன் குமார் சந்தனா.
அங்கு பயின்ற மற்ற மாணவர்கள் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலைகளைத் தேர்ந்தெடுத்தபோது, பவன் குமார் விண்வெளிப் பொறியியல் துறையைத் தனது எதிர்காலமாகத் தேர்ந்தெடுத்தார்.

படிப்பை முடித்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) விஞ்ஞானியாகப் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அங்கு சில ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றிய அவர், இந்தியாவின் சொந்த தயாரிப்பில் குறைந்த செலவில் ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டும் என்ற பெரிய கனவோடு, தனது பாதுகாப்பான அரசு வேலையைத் துறந்தார்.
தனது கனவை நனவாக்க, சக நிறுவனரான நாக பரத் தாகா என்பவருடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற விண்வெளித் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனத்தை நிறுவினார்.