விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமியிடம் நட்பாகப் பழகி வந்திருக்கிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அத்துடன், அதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
அதன்பிறகு அவ்வப்போது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் சிவா. அதில் சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கவனித்த சிறுமியின் உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அப்போதுதான் சிவா என்ற நபர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதையடுத்து 2021 ஏப்ரல் மாதம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர் சிறுமியின் உறவினர்கள்.
அதனடிப்படையில் சிவா மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சிவா குற்றவாளி என்று தீர்ப்பளித்தார் நீதிபதி வினோதா.
நீதிபதி தீர்ப்பை வாசித்ததும், `தெரியாம பண்ணிட்டேன்’ என்று கதறி அழுதார் சிவா. தொடர்ந்து, சிவாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.11,000/- அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.